மலேசியாவின் அடுத்த பொதுத்தேர்தலுக்கு அம்னோ கட்சி தயாராக இருப்பதாக அதன் தலைவர் அகமது சாஹிட் ஹமீடி தெரிவித்திருக்கிறார். மலேசியாவில் அரசியல் குழப்பம் பெருகிவரும் நிலையில் திரு சாஹிட், இதை தமது பேஸ்புக் பதிவில் வெளியிட்டார்.
நேற்று திரு நஜிப்பை அவரது வீட்டில் காணச் சென்ற திரு சாஹிட், தாங்கள் இருவரையும் ஒன்றாகக் காட்டும் படம் ஒன்றை தமது பதிவில் இணைத்தார்.
அண்மைய நாள்வரை எதிர்க்கட்சியாக இருந்த அம்னோ, தற்போது ஆளும் கூட்டணியான பெரிக்கட்டான் நேசலின் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கிறது. இந்தக் கூட்டணியில் பாஸ்,பிரிபூமி பெர்சாத்து, கெஅடிலான் ராக்யாட் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இணைந்துள்ளனர்.
இந்நிலையில் முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மது தாம் பெர்சாத்து கட்சியின் தலைவர் எனத் தொடர்ந்து சாதித்து வருகிறார். அதன் தற்போதைய தலைவர் முகைதீன் யாசின் தம்மை பதவிநீக்கம் செய்வதற்கு அதிகாரமற்றவர் என டாக்டர் மகாதீர் சாடியுள்ளார். இது அக்கட்சியின் பிளவுக்கான முக்கிய அறிகுறியாக கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.