கோலாலம்பூர்: மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் எஸ்.ஆர்.சி இன்டர்நேஷனல் நிறுவனத்தின் நிதியை முறைகேடாக கையாண்டதாகக் கூறப்படும் ஊழல் வழக்கில் வரும் ஜூலை 28ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கசாலி தெரிவித்தார்.
இந்த வழக்கில் நிதியாளர் ஜோ லோ தான் குற்றவாளி என்றும் நஜிப் 'மோசடியில் சிக்கியவர்' என்ற வாதத்தை முன்வைத்துள்ளது தற்காப்பு தரப்பு.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கிய இந்த வழக்கு விசாரணை நேற்று முடிவடைந்தது.
1எம்டிபி தொடர்பாக நஜிப்பிற்கு எதிரான பல்வேறு வழக்கு விசாரணைகளில் முதலாவதாக எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் வழக்கு விசாரணை முடிவுக்கு வந்துள்ளது.
நஜிப் நிதியமைச்சராக இருந்தபோது இந்த நிறுவனம் அவரது கட்டுப்பாட்டில் இருந்தது. 2012ஆம் ஆண்டு நிதியமைச்சில் ஒருங்கிணைக்கப்படுவதற்கு முன் 1எம்டிபியின் துணை நிறுவனமாக எஸ்.ஆர்.சி இன்டர்நேசனல் இருந்தது.