மலேசியாவின் பிரதமராக டாக்டர் மகாதீர் முகம்மது திரும்ப வேண்டும் என்று ஜனநாயக செயல் கட்சியின் (டிஏபி) வெளிப்படையான ஆதரவு, அன்வார் இப்ராஹிம் தலைமையில் இயங்கும் பக்கத்தான் ஹரப்பான் கட்சிக்குள்ளேயே பிளவு இருப்பதைக் காட்டியுள்ளது.
மார்ச் 1ஆம் தேதி முதல் பிரதமர் பதவியை ஏற்ற முகைதீன் யாசினுக்கு சட்டபூர்வமாக ஏற்பட்டுள்ள சவாலை இது ஒரு முடிவுக்குக் கொண்டுவரலாம்.
கடந்த செவ்வாய்க்கிழமையன்று ‘பக்கத்தான் ஹரப்பான் பிளஸ்’ (பிஹெச் பிளஸ்) கட்சி, பிரதமர் வேட்பாளர் ஒருவரை முடிவுசெய்யவுள்ளதாக இருந்தது. இதையடுத்து ஒரு முடிவுக்கு வந்துவிட்டதாக புதன்கிழமையன்று பிகேஆர் கட்சித் தலைவர் திரு அன்வார் அறிவித்தார்.
இருப்பினும் ‘பிஹெச் பிளஸ்’ கூட்டணியில் இணைந்துள்ள சாபா வரிசான் கட்சியிடமும் டாக்டர் மகாதீரை ஆதரித்த முகைதீனின் பெர்சத்து மலேசிய கட்சியின் ஐந்து உறுப்பினர்களிடமும் கேட்ட பின்னரே இறுதி முடிவை எடுக்க முடியும் என்றார் அவர்.
ஆனால் தங்களின் கூட்டணி ஒருமித்த முடிவுக்கு இன்னும் வரவில்லை என்று அதே நாளன்று டிஏபி கட்சியின் ஏற்பாட்டுச் செயலாளர் அந்தோணி லோக் தெரிவித்தார். மேலும் திரு அன்வார் துணைப் பிரதமராகி, ஆறு மாதங்களுக்குப் பிறகு டாக்டர் மகாதீரிடமிருந்து பிரதமர் பதவியை ஏற்கும் திட்டம் குறித்து பிகேஆர் கட்சி முடிவெடுப்பதற்காக ‘பிஹெச் பிளஸ்’ கூட்டணியில் உள்ள மற்றவர்கள் காத்துக்கொண்டிருந்ததாகவும் திரு லோக் சொன்னார்.
இந்நிலையில் டாக்டர் மகாதீருக்காக டிஏபி கட்சி வெளிப்படையாக தன் ஆதரவைக் காட்டுவதைக் கொண்டு, பக்கத்தான் ஹரப்பானின் 91 உறுப்பினர்களையும் தம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக திரு அன்வார் பெருமை அடித்துக்கொள்ள முடியாது என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
“பெரும்பான்மையைக் கொண்டுள்ளதாக அன்வார் இனி கூற முடியாது. கூட்டணியின் ஒருமித்த கருத்தை அவர் ஏற்க மறுத்தால், அது முகைதீனுக்கு ஏற்பட்டுள்ள சவாலை ஒரு முடிவுக்குக் கொண்டுவரலாம். பக்கத்தான் ஹரப்பான்கூட சிதைவடையலாம்,” என்றார் அரசியல் கவனிப்பாளர் திரு அடிப் ஸல்கப்லி.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online