பக்கத்தான் பிளஸ் கூட்டணியிலிருந்து விலகப்போவதாகத் தெரிவித்த மலேசிய முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது, ஜனநாயக செயல் கட்சி (டிஏபி), அமனா ஆகியவற்றுடன் தொடர்ந்து இணைந்து செயல்பட இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மகாதீர் - அன்வார் இணையை பிரதமர் பதவிக்கு பிகேஆர் கட்சி நிராகரித்த பிறகு இந்த தகவலை டாக்டர் மகாதீர் வெளியிட்டார்.
சின் சியூ நாளிதழுக்கு இன்று (ஜூன் 23) காலை அளித்த காணொளி நேர்காணலின்போது திரு மகாதீர், பிகேஆர் கட்சியையோ அல்லது அதன் தலைவர் அன்வார் இப்ராகிமையோ எதிர்கால ஒத்துழைப்பு குறித்து இனி தாம் தொடர்பு கொள்ளப்போவதில்லை என்று தெரிவித்தார்.
பக்கத்தான் பிளஸ் கூட்டணியில் பிகேஆர், டிஏபி, அமனா, வாரிசான் கட்சிகள் மற்றும் டாக்டர் மகாதீர் தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
“அன்வார் எனக்கு ஒத்துழைப்பு தர விரும்பாததால் நான் அவருக்கு ஒத்துழைப்பு நல்கப்போவதில்லை. நான் பிரதமராவதற்கு வேறு வழிகளைக் கண்டறிய வேண்டும். ஏதாவது வழி இருக்கும்,” என்று டாக்டர் மகாதீர் குறிப்பிட்டார்.
“நான் அவர்களுடன் சேர்வதற்கு முன்பு அவர்கள் எதிர்க்கட்சியினராகவே இருந்தனர். அவர்களால் வெற்றிபெற முடியவில்லை. நான் அவர்களுடன் சேர்ந்த பிறகு மலாய் இனத்தவரின் ஆதரவுடன் வெற்றி பெற்றோம்,” என்றார் திரு மகாதீர்.
அண்மையில் சிஎன்ஏவுடனான நேர்காணலின்போது டாக்டர் மகாதீருக்கு மூத்த அமைச்சர் அல்லது அமைச்சர் ஆலோசகர் பதவி அளிப்பது பற்றி சிந்திக்க விருப்பம் கொண்டிருப்பதாக திரு அன்வார் குறிப்பிட்டிருந்தார்.
பிரதமர் பதவி தவிர வேறு எந்தப் பதவியையும் தாம் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்று டாக்டர் மகாதீர், சின் சியூ நாளிதழுடனான நேர்காணலில் குறிப்பிட்டார்.