மலேசியாவில் கடினமான வேலைகளுக்கு பெரும்பாலும் வெளிநாட்டு ஊழியர்களை நம்பியிருப்பதால் அங்கு சுமார் 5 மில்லியன் வெளிநாட்டு ஊழியர்கள் இருப்பதாக அந்நாட்டு அனைத்துலக வர்த்தக, தொழில்துறை அமைச்சரான திரு அஸ்மின் அலி தெரிவித்துள்ளார்.
வேலை அனுமதிச் சீட்டு இல்லாமல் இருப்பவர்களையும் சேர்த்து அவர் அந்த எண்ணிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
நிறுவனங்கள் தானியக்க முறைக்கு விரைவில் மாற வேண்டிய சூழலை கொவிட்-19 நெருக்கடி ஏற்படுத்தியிருப்பதாக அவர் கூறினார். இதன் மூலம் வெளிநாட்டு ஊழியரணியைப் பெரிதும் சார்ந்திருக்க வேண்டியதிருக்காது என்றார் அவர்.
மலேசியாவின் 12வது திட்டத்தில் இந்த அம்சம் வலியுறுத்தப்படும் என்று இன்று அஸ்மிடா டெக்னிகல் காலெஜ் திறப்பின்போது அவர் குறிப்பிட்டார்.
தொழில்நுட்ப முதலீடுகளை ஈர்ப்பதற்கு, முதலில் தொழில்துறைத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான மனிதவள மேம்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்றார் அவர்.
கொவிட்-19 நெருக்கடியால் மத்திய வருமானக் குடும்பங்கள் பல குறைந்த வருமானக் குடும்பங்களாக வேண்டிய சூழல் ஏற்பட்டதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
குறைந்த வருமானக் குடும்பங்களாக இருந்தவர்களின் நிலை இன்னும் மோசமடைந்துள்ளது என்றும் அவர் கூறினார்.
போக்குவரத்து, ஜவுளித்துறை உட்பட 16 துறைகளில் உள்ள 105 நிறுவனங்களில் 1,185 வேலை வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.