கோலாலம்பூர்: சர்ச்சைக்குரிய தென்சீனக் கடல் பகுதியின் மலேசிய நீரிணையில் சீனக் கடலோரக் காவல் படையும் கடற்படை கப்பல்களும் பலமுறை ஊடுருவி இருப்பதாக மலேசிய அரசு அறிக்கை ஒன்று நேற்று தெரிவித்தது. இந்த ஊடுருவல் சம்பவங்கள் 2016ஆம் ஆண்டுக்கும் 2019ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் 89 தடவை நடந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மலேசிய கடற்படை அனுமதிக்க மறுத்தும் சீனக் கப்பல்கள் அவ்விடத்தில் தொடர்ந்து இருந்ததாகவும் கூறப்பட்டது.
முக்கிய வர்த்தகப் பாதையாக கருதப்படும் தென்சீனக் கடல் பகுதியில், பெரும்பான்மை தன்னுடையது என்று சீனா கூறி வர, அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இதன் தொடர்பில் பதற்ற நிலை அதிகரித்த வண்ணம் உள்ளது. இந் நிலையில் மலேசியா நேற்று அதன் அறிக்கையை வெளியிட்டது.
தன் நீரிணையில் அத்துமீறி வந்ததன் தொடர்பில் மலேசியா ஆறு முறை தன் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. இவ்வாண்டு மலேசியாவின் பொருளியல் பகுதியில் சீன ஆராய்ச்சிக் கப்பல் ஒன்று, ஒரு மாத காலமாக இருந்து கண்காணித்தது.
தென்சீனக் கடல் பகுதி விவகாரம் தொடர்பில் மலேசியாவுடன் பிலிப்பீன்ஸ், புரூணை, வியட்நாம், தைவான் ஆகிய நாடுகளும் வெவ்வேறு உரிமைக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளன.