மலேசியாவில் பிரபலமடைந்த சுகு பவித்ரா யூடியூப் ஒளிவழியிலுள்ள அனைத்து காணொளிகளும் நீக்கப்பட்டுள்ளன. ஈப்போ மாநிலத்தின் பேராக் நகரைச் சேர்ந்த 28 வயது திருமதி பவித்ராவுக்கும் 29 வயது திரு சுகுவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சினையின் காரணமாக, 786,000 பேர் பின்தொடர்ந்து வந்த இந்த ஒளிவழியிலிருந்து சமையல் குறிப்புகளைக் கொண்ட அவர்களது காணொளிகள் நீக்கப்பட்டுள்ளன.
மலேசியாவின் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு நிலவிய காலக்கட்டத்தில் திருமதி பவித்ரா சமைப்பதைக் காட்டும் காணொளிகளை அவர்கள் இருவரும் பதிவேற்றம் செய்ததை அடுத்து அந்நாட்டில் பிரபலம் அடைந்தனர்.
சில மாதங்களுக்குள்ளாகவே ஆயிரக்கணக்கானோர் இவர்கள் தயாரித்த காணொளிகளைப் பார்த்துள்ளனர். மலேசியப் பிரதமர் முகைதீன் யாசினைச் சந்திக்கும் வாய்ப்பையும் அவர்கள் பெற்றனர்.
ஜூலை 21ஆம் தேதியன்று எம். சுகு திருமதி பவித்ராவைத் தாக்கியதற்காகவும் அரிவாளை தம்முடன் வைத்திருந்ததற்காகவும் சுகு குற்றம் சாட்டப்பட்டிருந்தார். ‘ஈப்போவின் சின்னம்’ என்ற விருதை ஈப்போ மாநில அரசு திருமதி பவித்ராவுக்கு வழங்கியபோது தமது நன்றி உரையில் திரு சுகுவின் பெயரைக் குறிப்பிடாததால் சுகு கோபம் கொண்டு மறுநாள் குடிபோதையில் அவரைத் தாக்கியதாகச் செய்தி வெளிவந்தது.
கைது செய்யப்பட்ட சுகு பின்னர் ஈப்போ அமர்வு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார். இருந்தபோதும் திருமதி பவித்ரா, தம் கணவரை மன்னித்துவிட்டதாக நேற்று தெரிவித்தார். தாமும் தம் கணவரும் சாதாரணமானவர்கள் என்றும் இனிமேல் எந்தப் புகழும் பாராட்டும் தங்களுக்கு வேண்டாம் என்றும் திருமதி பவித்ரா கூறினார்.