மலேசியாவின் சாபா சட்டமன்றம் கலைக்கப்பட்டதாக அதன் முதல்வர் மொஹமட் ஷாஃபி அப்தால் இன்று செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்தார். 60 நாட்களுக்குள் அங்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். புதிய முதல்வர் தேர்ந்தெடுக்கப்படும்வரை திரு அப்தால் காபந்து முதல்வராக இருப்பார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவுவதன் மூலம் தற்போதைய மாநில அரசாங்கத்தைக் கவிழ்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் சொன்னார்.
இன்று காலை இஸ்தானா நெகிரியில் ஆளுநரை ஜூஹாரைச் சந்தித்து மாநில சட்டமன்றத்தை கலைக்குப்படி ஆலோசனை தெரிவித்ததாகவும் அவரும் இந்த முடிவுக்கு இணக்கம் தெரிவித்ததாக ஷாஃபி சொன்னார்.
மாநில அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக கோலாலம்பூரிலிருந்து குழுக்கள் வந்து கொண்டே இருப்பதால், கனத்த மனதுடன் தான் இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் சொன்னார்.
“தங்களுக்கு பெருமளவில் ஆதரவு இருப்பதாக அவர்கள் (மூசா அமான் கட்சி) கூறினாலும், எங்களுக்கு இன்னும் போதுமான ஆதரவு உள்ளது.
“சபா மக்களிடம் ஒருமைப்பாடு இருப்பதாக நான் நம்புகிறேன். அரசாங்கத்தை யார் நடத்த வேண்டும் என்பதை தீர்மானிக்க சாபா மக்களுக்கு அதிகாரம் உள்ளது.
“சட்டமன்றம் கலைக்கப்பட்டிருந்தாலும் தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவுக்கான தேதிகளை அறிவித்து அடுத்த அரசாங்கம் பொறுப்பேற்கும் வரை நான் காபந்து முதல்வராக இருப்பேன்,” என்று அவர் சொன்னார்.
செய்தியாளர் சந்திப்புக்கு முன் ஷாஃபி தன்னுடைய சக சட்டமன்ற உறுப்பினர்களைச் சந்தித்தபோது, மடியஸ் டாங்காவ் போன்ற சிலர் அங்கு இல்லை. ஏனெனில் அவர்கள் கோலாலம்பூர் சென்றிருக்கலாம் அல்லது ஹஜ்ஜூ பெருநாளுக்காக சொந்த ஊருக்குச் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே, சட்டமன்ற கலைப்பிற்கு பிறகு பேசிய எதிர்க்கட்சித் தலைவரான மூசா அமான் தனக்கு மீண்டும் துரோகம் இழைக்கப்பட்டுவிட்டதாக சொன்னார்.
தனக்கு 33 உறுப்பனர்களின் ஆதரவு உள்ளதாகவும் எனவே சட்டமன்ற கலைப்பு முடிவு குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு ஆளுநரிடம் தான் முறையிடப்போவதாக சொன்னார்.