பெட்டாலிங் ஜெயா: தமிழகத்தின் சிவகங்கையிலிருந்து மலேசியாவின் கெடா மாநிலத்திற்குத் திரும்பிய உணவக உரிமையாளர் ஒருவரிடமிருந்து ஒரு சிலருக்கு கொரோனா கிருமி பரவியதால், கெடாவில் உள்ள நான்கு துணை மாவட்டங்களுக்கு மேம்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அந்த உணவக உரிமையாளருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. சம்பந்தப்பட்ட அந்த உணவகத்திற்கு உட்பட்ட ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள பகுதிகளில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடப்பில் இருக்கும்.
அந்த வட்டாரத்தில் உள்ள ஐந்து பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் தொடங்கி இம்மாதம் 29ஆம் தேதி வரை பள்ளிகள் மூடப்பட்டிருக்கும்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடப்பிலுள்ள வட்டாரங்களில் ஆசிரியர்கள் வேலைக்குச் செல்ல அனுமதி இல்லை. இருப்பினும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் அல்லாது மற்ற இடங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகள் வழியாக வேலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என அறியப்படுகிறது.
சிவகங்கையிலிருந்து நாடு திரும்பிய அந்த உணவக உரிமையாளருடன் தொடர்பில் இருந்த 11 பேருக்கு நேற்று முன்தினம் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களில் ஏழு முதல் 10 வயதுக்கு இடைப்பட்ட இரு பள்ளி மாணவர்களும் அடங்குவர்.
இந்தக் கிருமித்தொற்றுக் குழுமத்தின் தொடர்பில் இதுவரை 313 பேரிடம் கிருமித்தொற்று பரிசோதனை நடத்தப்பட்டதாக சுகாதர அமைச்சின் தலைமை இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
“அவர்களில் 20 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தொற்று கண்டவர்களில் 15 பேர் மலேசியர்களும் ஐவர் வெளிநாட்டவரும் ஆவர். மேலும் 13 பேரின் மருத்துவப் பரிசோதனையின் முடிவுக்காக காத்திருக்கிறோம்,” என்றார் அவர்.