மூவார்: கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு எதிரான போரில் தங்களை முன்களத்தில் இருப்பவர்களாக அனைத்து மலேசியர்களும் கருதவேண்டும் என்றார் மலேசிய பிரதமர் முகைதீன் யாசின்.
சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவரும் முன்களப் போராளியாகத் தங்களை நினைத்துக்கொண்டு நாட்டில் கொவிட்-19 தொற்றுக்கு எதிராகச் செயல்படவேண்டும் என்றும் தங்களால் இயன்றவரை புதிய வழக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கூறினார் அவர்.
புதிய கிருமித்தடுப்பு வழக்கங்களைக் கடைப்பிடிப்பது தொடர்பான இயக்கத்தை நேற்று பாகோ விளையாட்டு அரங்கில் அவர் துவக்கி வைத்தபோது இதனைத் தெரிவித்தார்.
தற்போது மலேசியாவில் நடப்பில் இருக்கும் கிருமித்தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் கட்டுப்பட்டு நடப்பதில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும் என்று கோரினார் திரு முகைதீன்.
மீண்டும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அரசாங்கம் பிறப்பிப்பதை மக்கள் விரும்பமாட்டார்கள் என்று தாம் நம்புவதாகவும் அவர் நினைவுறுத்தினார். இக்கட்டுப்பாட்டு ஆணையால் மலேசியர்கள் பலர், தங்களின் வீட்டிலேயே முடங்கிக் கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அத்துடன் பெரும்பாலான வியாபாரங்கள் இயங்க முடியாமல் போயின.
“இதனால்தான் நம்மிடையே மெத்தனப் போக்கு கூடாது. தொடர்ந்து விழிப்பாக இருந்து அரசாங்கம் அமல்படுத்தும் நடவடிக்கைகளுக்குக் கட்டுப்பட்டு நடக்கவேண்டும்,” என்றார் பிரதமர் முகைதீன்.
அத்துடன் மலேசியாவில் கொவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கையை உயர்த்தக்கூடிய புதிய கிருமித்தொற்று குழுமங்கள் உருவாகுவதைத் தடுப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றார் அவர்.
இதனால் வேலையிடம், பொது இடங்கள், வழிபாட்டுத் தலங்கள், வீடு போன்ற அனைத்து இடங்களிலும் இருக்கும்போது ஒருவருக்குச் சுயக் கட்டுப்பாடு அதிகம் தேவைப்படுவதாக அவர் சுட்டினார்.
சிவகங்கை கிருமித்தொற்று
குழுமத்தில் குறைந்தது 43 பேர்
அரசாங்கம் நடப்புக்குக் கொண்டு வந்துள்ள கிருமித் தடுப்பு நடவடிக்கைகளுக்கு உட்படாத ஒரு சிலரால் கிருமித்தொற்று சம்பவங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதைப் பற்றியும் திரு முகைதீன் பேசினார்.
இதன் தொடர்பில் சிவகங்கை கிருமித்தொற்று குழுமத்தை ஓர் உதாரணமாகச் சுட்டினார்.
“அண்மையில் சிவகங்கை கிருமித்தொற்று குழுமம் இங்கு அடையாளம் காணப்பட்டது.
“கெடா மாநிலத்தில் சிவகங்கை என்ற பெயரில் ஊரே இல்லை. ஆனால் இந்தியாவின் ஓர் ஊரிலிருந்து இங்கு திரும்பிய சிலருடன் தொடர்புடையதுதான் இக்குழுமம்,” என்று விளக்கினார் திரு முகைதீன்.
வெளிநாட்டிலிருந்து திரும்பியதால் இவர்களுக்கு 14 நாட்களுக்கு வீட்டில் இருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கண்காணிப்புச் சாதனத்தைத் தங்கள் கைகளில் அணிந்திருந்தும் இவர்கள் ஓர் உணவகத்திற்குச் சென்று அங்கு வந்த பிறருக்கும் கிருமித்தொற்றைப் பரப்பியதாக அவர் சொன்னார்.
கட்டுப்பாடுகளை மீறாமல், புதிய கிருமித் தடுப்பு நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறிய திரு முகைதீன், அனைவரது ஒத்துழைப்பும் இல்லாமல் கிருமித் தொற்றிலிருந்து விடுபடுவது முடியாத ஒன்றாகிவிடும் என்றார்.
சிவகங்கை கிருமித்தொற்றுக் குழுமம் தொடர்பில் இதுவரை 3,246 பேர் அடையாளம் காணப்பட்டனர். இவர்களில் 43 பேருக்குக் கிருமித்தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
அதுமட்டுமல்லாமல் கெடா மாநிலத்தையும் தாண்டி கிருமித்தொற்று குழுமத்தின் சம்பவங்கள், பெர்லிஸ் மற்றும் பினாங்கு மாநிலங்களுக்குப் பரவியுள்ளன. அவ்விரு மாநிலங்களிலும் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11ல் உள்ளது.
பினாங்கில் கடந்த சில மாதங்களாக புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகவில்லை. இப்போது சிவகங்கை கிருமித்தொற்று குழுமத்தைச் சேர்ந்தவராக அடையாளம் காணப்பட்ட ஒருவரால் அந்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
பெர்லிசில் பாதிக்கப்பட்ட பத்து கிருமித்தொற்று சம்பவங்களும் ஒரே குடும்பம் தொடர்பானவை என்றும் தெரிவிக்கப்பட்டது.
தடுப்பூசி உருவாக்கத்தில் ஆதரவளிக்க தயார்
தொடர்ந்து கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மருந்தை உருவாக்குவதில் மலேசியா உதவி நல்கத் தயார் என்றும் அவர் நேற்றைய நிகழ்வில் கூறியிருந்தார்.
அனைத்துலக அரங்கில் மற்ற நாடுகளின் அமைச்சுகளைக் கொண்ட பணிக்குழுவில் மலேசியாவும் இடம்பெறத் தயாராக உள்ளதென அவர் சொன்னார்.
இப்பணிக்குழு இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் அமைக்கப்பட்டது. பல நாடுகள் தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடிப்பதை இலக்காகக் கொண்டுள்ளன என்று கூறிய திரு முகைதீன், மருந்தைக் கண்டுபிடிப்பதற்கு இன்னும் சிறிது காலம் தேவைப்படும் என்றார்.
அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் தடுப்பூசியைக் கண்டுபிடிக்க வாய்ப்புள்ளது என்றார் அவர்.