பொறுப்பற்ற முறையிலோ மது, போதைப்பொருளை உட்கொண்ட பின்னரோ வாகனம் ஓட்டி, விபத்தை ஏற்படுத்தி, உயிருடற்சேதம் விளைவிப்போருக்குக் கடும் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என மலேசிய அரசாங்கம் அறிவித்து இருக்கிறது.
இதற்கு வகைசெய்யும் சாலைப் போக்குவரத்து சட்டத்திருத்த மசோதா மலேசிய நாடாளுமன்றத்தில் இன்று குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
சாலை விபத்துகள் மூலம் நிகழும் மரணங்களைத் தடுக்கும் நோக்கில் விரிவான முறையில் சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக மலேசியப் போக்குவரத்து அமைச்சர் வீ கா சியோங் தெரிவித்தார்.
அதே நேரத்தில், மக்கள் மது அருந்துவதற்கான உரிமையை இந்த மசோதா தட்டிப்பறிக்கவில்லை என்பதை டாக்டர் வீ தெளிவுபடுத்தினார்.
அபாயகரமான அல்லது பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டி, மரணம் விளைவிப்போருக்கு ஐந்து முதல் பத்தாண்டு வரை சிறைத் தண்டனையும் 20,000 முதல் 50,000 ரிங்கிட் வரை அபராதமும் விதிக்கப்பட இந்தச் சட்டத்திருத்தம் முன்மொழிந்து இருக்கிறது.
அத்துடன், குற்றமிழைத்தது உறுதிசெய்யப்படும் பட்சத்தில் வாகன ஓட்டுநர் உரிமமும் ஐந்தாண்டுக்கு ரத்து செய்யப்படும்.
கவனக்குறைவாகவும் கண்மூடித்தனமாகவும் வாகனம் ஓட்டுவோருக்கு 5,000 முதல் 10,000 ரிங்கிட் வரை அபராதமும் முதல் முறை இந்தக் குற்றத்தைப் புரிவோருக்கு ஓராண்டு வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம்.
வாகனத்தைக் கட்டுப்படுத்தும் திறனை இழக்கும் அளவிற்கு மது அருந்தி, அல்லது போதைப்பொருளை உட்கொண்டு, விபத்தின் மூலம் உயிரிழப்பை ஏற்படுத்துவோருக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை சிறையும் 50,000 முதல் 100,000 ரிங்கிட் வரை அபராதமும் விதிக்க புதிய சட்டத் திருத்தம் வகைசெய்கிறது.
அத்துடன், குற்றம் நிரூபிக்கப்பட்ட நாளில் இருந்து பத்து ஆண்டுகளுக்கு வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கும் அல்லது பெறும் தகுதியும் பறிபோகும்.
வாகனத்தைக் கட்டுப்படுத்தும் திறனை இழக்கும் அளவிற்கு மது அருந்தி, அல்லது போதைப்பொருளை உட்கொண்டு, விபத்தை ஏற்படுத்தி காயம் விளைவிப்போருக்கு ஏழு முதல் பத்தாண்டுகள் வரை சிறையும் 30,000 முதல் 50,000 ரிங்கிட் வரை அபராதமும் விதிக்கப்படலாம்.
பரிந்துரைக்கப்பட்ட ஆல்கஹால் அளவு வரம்பைக் குறைப்பதற்கு ஏதுவாக சட்டப்பிரிவு 45ஜி-யைத் திருத்தவும் புதிய மசோதா முன்மொழிகிறது.
ஒரு தனிமனிதனின் 100 மில்லி லிட்டர் மூச்சுக் காற்றில் 22 மில்லிகிராம் ஆல்கஹால், 100 மி.லி. ரத்தத்தில் 50 மி.கி. ஆல்கஹால், 100 மி.லி. சிறுநீரில் 67 மி.கி. ஆல்கஹால் என வரம்பு திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்றும் அம்மசோதா பரிந்துரைக்கிறது.
இதனிடையே, அரசாங்கத்தின் வருவாயை அதிகரிக்கும் நோக்கத்துடன் அபராதத் தொகை உயர்த்தப்பட்டுள்ளதாக எழுந்துள்ள விமர்சனத்தை டாக்டர் வீ மறுத்துள்ளார்.