19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டின்போது தங்களது வாழ்வாதாரத்திற்காக அந்நிய நாடுகளில் தஞ்சமடைந்த தமிழர்கள் பல அபாயங்களுக்கு மத்தியில் கடுமையாக உழைத்தனர். இதற்கு பெண்கள் மட்டும் விதிவிலக்கல்ல.
“பெண்களும் ரப்பர் தோட்டத்தில் வேலை செய்தனர். என் பாட்டி காலை 5 மணிக்கு எழுந்து தோட்டத்திற்குச் செல்வார்கள். கும்மிருட்டில் பாம்புகளும் தேள்களும் நிறைந்த பச்சை மண்ணுக்கு இடையில் நடந்து நடந்து வேலை பார்க்கவேண்டி இருந்தது,” என்று கூறினார் மலேசிய இந்தியர் பத்மாவதி மனோகரன்.
மலேசியாவின் 63ஆம் சுதந்திர தினத்தன்று, பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின்போது அங்கு குடிபெயர்ந்து கடுமையாக உழைத்து வாழ்ந்த இந்திய மூதாதையர்களை அங்கீகரிக்கும் படத்தொகுப்பு ஒன்று தற்போது இணையத்தில் வலம் வருகிறது.
அப்போது ‘மலாயா’ என அழைக்கப்பட்ட அந்நாட்டிலும் சிங்கப்பூரிலும் தங்கியிருந்த இந்திய இனத்தவர் பலரின் வரலாற்றுக் கதைகளில் ரப்பர் மரம், பிரிக்க இயலாத அங்கமாகும். ஏனெனில் அத்தகைய ரப்பர் மரத்தோட்டங்களில்தான் தமிழர்கள் அநேகரின் உழைப்பு சங்கமமானது. இவர்களின் உருவங்கள், பெயர்கள், அனுபவித்த வலிகள் போன்றவை காலப்போக்கில் மெல்ல மறக்கப்பட்டு வரும் நிலையில் இவர்களது வாழ்க்கையைக் கற்பனை நயத்துடன் சித்திரிக்கும் படங்களை 35 வயது பத்மாவதி இன்று வெளியிட்டார்.
“ எனது மூதாதையர்களை பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியாளர்கள் தமிழகத்திலிருந்து மலாயாவுக்கு இடம்பெயரச் செய்தனர். என் கொள்ளுத்தாத்தா, தமது பூர்விக பூமியான திண்டிவனத்திலிருந்து ஒரு பிடி மண்ணை எடுத்துக்கொண்டு இங்கு வந்ததாக என் அம்மா கூறினார். தமிழகத்திலிருந்து புறப்படுவதற்கு முன்னர் அவர், தமது பயணம் வெற்றிகரமாக இருக்கவேண்டும் என தமது குல தெய்வமான மதுரை வீரனைக் கும்பிட்டு மலாயாவுக்குப் புறப்பட்டார். இதனைக் கேள்விப்பட்ட நான் மனமுருகிப் போனேன். இவரைப் போல இங்கு வந்த தமிழர்களுக்காக இந்தப் படைப்பை உருவாக்கினேன்” என்று பத்மாவதி தமிழ் முரசிடம் தெரிவித்தார்.
1957ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதியன்று மலேசியா சுதந்திரம் அடைந்த தினத்தைக் கொண்டாட, தமது முன்னோரைப் போல மலாயாவிற்கும் சிங்கப்பூருக்கும் குடிபெயர்ந்த ஆரம்பகால இந்தியக் குடியேறிகள், மலேசியா நிறுவப்பட்டதற்கு முன் அனுபவித்த வாழ்க்கையை நினைவுகூரும் கலைப்படைப்பை வெளியிட முடிவு செய்ததாக அவர் கூறினார்.
கோலாலம்பூரிலுள்ள ஹுலு லங்காட் பகுதியிலுள்ள ரப்பர் மரத்தோட்டத்தில் இந்தப் படப்பிடிப்பு செய்யப்பட்டிருந்தது. “கோலாலம்பூர் சுற்றுவட்டாரத்தில் இப்போது ரப்பர் மரத்தோட்டங்களைக் காண்பது மிக அரிதாகிவிட்டது,”
வெண்ணிலா வசந்தநாதன் மற்றும் துபாஷேணி தமிழ்ச்செல்வம், ரப்பர் தோட்ட விவசாயிகளாக இந்தப் படப்டிப்பில் இடம்பெற்றனர். லினெய் ரோகித் இதில் இளம்பிள்ளையாக வருகிறார். பரதன் அமுதன் இதன் படப்பிடிப்பாளர்.
சமூக ஊடகங்களில் இந்தப் படைப்பைப் பார்த்து பலரும் தங்களது பாராட்டை வெளிப்படுத்தினர்.
“அழகான படக்கலை. மலேசியாவின் வளர்ச்சிக்குப் பங்காற்றிய மூதாதையருக்கு இது நல்ல அஞ்சலி,” என்றார் ஃபேஸ்புக் பயனீட்டாளர் வசந்தா.
“வருங்கால சந்ததியருக்குச் சிறந்த தாய்நாட்டை அமைத்த நம் மூதாதையரை இந்த அற்புதப் படைப்பு கொண்டாடுகிறது,” என்று சான் கிம் லியோங் தெரிவித்தார்.
மலேசிய இந்தியர்கள் தமது வேர்களை என்றும் மறக்கக்கூடாது என்பதே பத்மாவதியின் ஆசை.