மலேசியாவின் பேராக் மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தலின்போது எதிர்க்கட்சிக்கு உதவியதாக ஜோகூர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் ஒஸ்மான் சாப்பியான் மீது ஆளும் கூட்டணியைச் சேர்ந்தோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதன் காரணமாக பெர்சத்து கட்சியிலிருந்து அவர் நீக்கப்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பெர்சத்து கட்சியிலிருந்து திரு ஒஸ்மான் நீக்கப்பட்டால் ஜோகூரில் தொங்கு சட்டமன்றம் ஏற்படும் சாத்தியம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஜோகூர் சட்டமன்றத்தில் 56 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் 29 உறுப்பினர்கள் ஆளும் கூட்டணியான பெரிக்காத்தான் நேஷனலைச் சேர்ந்தவர்கள். சில உறுப்பினர்கள் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியிலிருந்து கட்சி தாவிய பிறகு பெரிக்காத்தான் நேஷனல் நூலிழையில் பெரும்பான்மையைக் கொண்டிருக்கிறது.
திரு ஒஸ்மான் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியில் இணைந்தால் இரு கூட்டணிகளுக்கு தலா 28 இடங்கள் இருக்கும்.
தொங்கு சட்டமன்றம் ஏற்படும் பட்சத்தில் மசோதாவை ஏற்றுக்கொள்வது தொடர்பில் சிக்கல் ஏற்படும் என்று ஜோகூர் சட்டமன்ற நாயகர் சுஹாய்சான் கயாட் தெரிவித்தார். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் முடிவை சட்டமன்ற நாயகரின் வாக்கு நிர்ணயிக்கும் என்றார் அவர்.