சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையில் ஊழியர்கள் சென்று வருவதற்கான நடைமுறைகள் விரைவில் இறுதி செய்யப்படும் என்று மலேசிய பிரதமர் முகைதீன் யாசின் தெரிவித்து உள்ளார்.
மலேசியாவுக்கான சிங்கப்பூர் தூதர் வேணுகோபால மேனன் புத்ராஜெயாவில் உள்ள தமது அலுவலகத்திற்கு வந்திருந்தபோது அவருடன் கலந்து பேசப்பட்ட அம்சங்களுள் இதுவும் ஒன்று என திரு முகைதீன் தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கப்பூர்-மலேசிய எல்லை தொடர்பில் இருதரப்பு தடையற்றப் பயணமுறை (ஆர்ஜிஎல்) மற்றும் அவ்வப்போது மேற்கொள்ளப்படும் பயண ஏற்பாடுகள் (பிசிஏ) என்னும் இரு அம்சங்கள் ஆகஸ்ட் 17ஆம் தேதி தொடங்கப்பட்டன.
அதன் தொடர்பிலும் சிங்கப்பூர் தூதருடன் தாம் கலந்து பேசியதாக மலேசிய பிரதமர் தெரிவித்தார்.
இவ்விரு ஏற்பாடுகளும் சுமுகமாகவும் ஆற்றல் வாய்ந்ததாகவும் இருப்பதாக இருதரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டதாக அவர் சொன்னார்.
‘ஆர்ஜிஎல்’ என்பது இருதரப்பிலும் அத்தியாவசிய, அதிகாரத்துவ பயணங்களை 14 நாட்கள் வரை மேற்கொள்ள வழிசெய்கிறது.
‘பிசிஏ’ ஏற்பாடு, வர்த்தகத்துக்கும் வேலை செய்யவும் நீண்டகால குடிநுழைவு அட்டை ைவத்திருக்கும் இருநாட்டு குடியிருப்பு வாசிகளையும் மலேசியாவுக்குள்ளும் சிங்கப்பூருக்குள்ளும் நுழைய அனுமதிக்கிறது.
“இரு நாடுகளுக்கும் இடையில் தினமும் ஊழியர்கள் வந்து செல்வதை அனுமதிக்கும் யோசனை தொடர்பான செயலாக்க நடைமுறைகளை மலேசியாவும் சிங்கப்பூரும் விரைவில் முடிவு செய்யும் என நம்புகிறேன்.
“பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு உதவவும் தேசிய பொருளியலை முடுக்கிவிடவும் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளின் ஒரு பகுதி இது.
“இரு நாட்டிலும் நடப்பில் உள்ள சுகாதாரப் பாதுகாப்பு அம்சங்களைக் கைவிடாமல் மக்கள் நடமாட்டமும் எல்லைக் கட்டுப்பாடும் சுமுகமாக நடைபெறுவதற்கான உறுதி ஏற்க வேண்டியதன் அவசியத்தையும் நாங்கள் பேசினோம்,” என்று சந்திப்பு தொடர்பாக திரு முகைதீன் விளக்கி உள்ளார்.
கொவிட்-19 கொள்ளைநோய் பரவலுக்கு முன்னர் வரை சிங்கப்பூர்-மலேசிய கடற்பாலத்தில் தினமும் 300,000க்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்தனர். அவர்களில் சுமார் 100,000 மலேசியர்கள் அன்றாடம் வந்து செல்லக்கூடியவர்களாக இருந்தனர்.