முதல்வர் பதவியைக் கைப்பற்ற இருவர் போட்டி மலேசியாவின் சாபா மாநில சட்டமன்றத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல், பாரிசான் நேஷனல் மற்றும் சாபா பெர்சத்து கட்சி (பிபிஎஸ்) ஆகியவை அடங்கிய சாபா மக்கள் கூட்டணி வெற்றி பெற்றது.
மொத்தமுள்ள 73 இடங்களில் சாபா மக்கள் கூட்டணி 38 இடங்களைக் கைப்பற்றியது. பாரிசான் நேஷனலுக்கு 14 இடங்களும் பெரிக்காத்தான் நேஷனலுக்கு 17 இடங்களும் சாபா பெர்சத்து கட்சிக்கு ஏழு இடங்களும் கிடைத்தன. எதிர்த்தரப்பு வாரிசான் கூட்டணி 32 இடங்களை வென்றது. சுயேச்சை வேட்பாளர்கள் மூன்று தொகுதிகளில் வெற்றி பெற்றனர்.
தேர்தலில் வென்று ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்ட நிலையில், யார் முதல்வர் என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. சாபா பாரிசான் நேஷனல் தலைவர் புங் மொக்தார் ராடின் அல்லது சாபா பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் ஹஜிஜி நூர் ஆகியோரில் ஒருவரே முதல்வராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்வர் யார் என்பதை முடிவுசெய்ய சாபா மன்னர் ஜுகார் மகிருதின் சற்று கால அவகாசம் அளிக்கும்படி கேட்டிருப்பதாக திரு புங் சொன்னார். திரு மொக்தாரும் கூட்டணியைச் சேர்ந்த வேறு மூன்று தலைவர்களும் நேற்று மன்னரைச் சந்தித்துப் பேசினர். அதன்பின், மன்னர் கூடிய விரைவில் முதல்வரை முடிவுசெய்வார் என்று திரு புங் உறுதியளித்தார்.
முன்னதாக, மன்னரே அடுத்த முதல்வரை முடிவுசெய்வார் என்று திரு ஹஜிஜி நூரும் செய்தியாளர்களிடம் கூறினார். நேற்று முன்தினம் நள்ளிரவுக்குப் பிறகு தேர்தல் முடிவுகள் வெளியானதை அடுத்து, அடுத்த முதல்வர் யார் என்ற விவாதம் சாபா மக்கள் கூட்டணியில் தொடங்கிவிட்டது. புங் மொக்தார் அல்லது ஹஜிஜி நூரே முதல்வராவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அது தொடர்பில் கூட்டணியில் நீண்ட விவாதம் நடந்து வருகிறது.
இதனிடையே, பிரதமர் முகைதீன் யாசின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையைக் காட்டுவதாக சாபா சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன என்று மலேசியாவின் நிதி, பொருளியல் அமைச்சர் அஸ்மின் அலி தெரிவித்து இருக்கிறார். சாபாவின் வளர்ச்சிக்காகவும் மக்களின் நல்வாழ்விற்காகவும் கூட்டரசு உணர்வை நிலைநிறுத்தியதன் மூலம் சாபா மக்கள் தங்களின் முதிர்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர் என்று அவர் சொன்னார்.
“மக்களை நன்கு கவனித்துக்கொள்ளும், அனைவரையும் உள்ளடக்கும், மாநில இறையாண்மைக்கும் மக்களின் பாதுகாப்பிற்கும் உத்தரவாதம் அளிக்கும் ஒரு மாநில அரசை சாபா மக்கள் மக்கள் தேர்வுசெய்துள்ளனர் என்பதைத் தேர்தல் முடிவுகள் தெளிவாகக் காட்டுகின்றன,” என்றார் திரு அஸ்மின்.