மலேசியாவில் அண்மைய நாட்களில் கொரோனா கிருமித்தொற்று சம்பவங்கள் அதிகரித்து வந்தாலும், சிங்கப்பூருடனான எல்லையத் திறப்பது குறித்த பேச்சுவார்த்தையை மலேசிய அரசாங்கம் தொடரும் என்று கூறப்பட்டுள்ளது.
“பொருளியல் நடவடிக்கை மன்ற வாராந்திர கூட்டங்களில் இது குறித்து தொடர்ந்து விவாதிக்கப்படுகிறது. கொவிட்-19 சூழல் மற்றும் எல்லை மூடல் காரணமாக பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுப்பயணத் துறை பற்றி கடந்த கூட்டத்தில் பேசப்பட்டது,” என்று பொருளியல் விவாகரங்களுக்கான அமைச்சர் முஸ்தஃபா முகமது கூறினார்.
“மலேசியா வெளிநாட்டு சுற்றுப் பயணிகளில் பாதியை இழந்திருக்கிறது; அவர்களில் 50 விழுக்காட்டினர் சிங்கப்பூரிலிருந்து வருவோர்,” என்றார் அவர்.
சிங்கப்பூருடனான இரண்டு இணைப்புப் பாதைகளையும் திறந்துவிடுமாறு ஜோகூர் மாநில அமைச்சர்கள், மலேசிய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர். பல ஜோகூர்வாசிகள் சிங்கப்பூரில் பணிபுரிவோர் என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசியாவில் இன்று 293 புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகின; நேற்றைய எண்ணிக்கையான 317ஐவிட இது சற்று குறைவு.
பெரும்பாலான சம்பவங்கள் சாபா, கெடா மாநிலங்களில் பதிவாகியுள்ளன.