மலேசியப் பிரதமர் அலுவலகத்தில் இம்மாதம் 3ஆம் தேதியன்று கொவிட்-19 தொடர்பாக சிறப்பு அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
இதில் மலேசியப் பிரதமர் முகைதீன் யாசினும் மற்ற அமைச்சர்களும் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் அலுவலக அமைச்சர் டாக்டர் ஸுல்கிஃப்லி முகம்மது அல்-பக்ரிக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது பிறகு தெரியவந்தது.
இதையடுத்து, பிரதமர் முகைதீன் யாசின் வீட்டிலேயே தம்மைத் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.
“சுகாதார அமைச்சின் ஆலோசனைப்படி அடுத்த 14 நாட்களுக்கு எனது வீட்டிலேயே என்னைத் தனிமைப்படுத்திக் கொள்வேன்.
“இருப்பினும், இது எனது பணிக்கு இடையூறாக இருக்காது. அரசாங்கப் பணிகள் தொடரும். வீட்டிலிருந்தவாறு எனது பொறுப்புகளை நிறைவேற்றுவேன். தேவைப்பட்டால் காணொளி மூலம் மெய்நிகர் கலந்துரையாடல்களை நடத்துவேன்,” என்று திரு முகைதீன் தெரிவித்தார்.
இதற்கிடையே, கொரோனா கிருமித்தொற்றுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்னாள் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இதன் காரணமாக இரண்டு வார இடைவெளிக்குப் பிறகு நேற்று தொடங்கவிருந்த 1எம்டிபி வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் நஜிப் நெருங்கிய தொடர்பில் இருந்ததை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.
அண்மையில் சாபா மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் பிரசாரத்துக்காக நஜிப் அங்கு சென்றிருந்தார். அப்போது நஜிப்பும் சில அமைச்சர்களும் இருந்த இடத்தில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட சிலர் இருந்ததாகக் கூறப்படுகிறது.
“தேர்தல் பிரசாரத்தின்போது பாதுகாப்பான தூர இடைவெளி, முகக்கவசம் அணிதல் ஆகிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முழுமையாகக் கடைப்பிடிப்பது சாத்தியமல்ல,” என்று நஜிப்பின் வழக்கறிஞர் தெரிவித்தார்.