உள்ளாடையில் மறைத்து ஒரு கிலோ ‘ஹெராயின்’ போதைப்பொருளை ஆஸ்திரேலியாவுக்குள் கடத்திய மலேசிய விமான சிப்பந்திக்கு கிட்டத்தட்ட 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக உடல் நலக் குறைவால் துன்புறும் மகளின் மருத்துவச் செலவைச் சமாளிக்க பொருளீட்டுவதற்காக இந்தச் செயலில் அவர் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
கால்களுக்கிடையே ஒரு கிலோ போதைப்பொருளை மறைத்து, சாதாரணமாக நடக்க ஸைலீ ஸைனலுக்கு மூன்று மாதப் பயிற்சி தேவைப்பட்டது.
மலிண்டோ ஏர் விமான சிப்பந்தியான அவர், அக்டோபர் 2018 முதல் ஜனவரி 2019க்கு இடைப்பட்ட காலத்தில் 8 முறை இதுபோன்ற கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது.
மெல்பர்னில் அதிகாரிகளிடம் பிடிபட்டபோது, 40 வயதான ஸைனல், அது கஞ்சாவாக இருக்கும் என்றும் ஹெராயின் என நினைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
ஸைனலின் மகள் பிறவியிலேயே பெருங்குடல் தொடர்பான குறைபாட்டால் பிறந்தவர். அவருக்கு அறுவைசிகிச்சை, மருத்துவம் போன்றவை தேவைப்பட்டன.
மகளின் சிகிச்சைக்காகத் தேவைப்படும் செலவைச் சமாளிக்க நாடுகளுக்கிடையே போதைப்பொருள் கடத்தும் கும்பலுக்காக போதைப் பொருளைக் கடத்த சம்மதித்தார் ஸைனல்.
“அந்தச் சமயத்தில் என்னுடைய குழந்தையும் குடும்பமுமே பெரிதாகத் தோன்றின. இந்த போதைப்பொருள் மற்றவர்களுக்கு எத்தகைய கடும் விளைவுகள் ஏற்படுத்தும் என்பதை எண்ணிப்பார்க்கத் தவறிவிட்டேன்,” என்று விக்டோரியா நீதிமன்றத்தில் அவர் தெரிவித்தார்.
ஒவ்வொரு முறை போதைப்பொருளை ஆஸ்திரேலியாவுக்குக் கடத்தியதும் ஒரு பெண்மணியிடம் அதனை ஒப்படைத்தார். 20 முறை ஆஸ்திரேலியாவுக்குள் போதைப்பொருளைக் கடத்தியதாக ஸைனல் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
மெல்பர்னை தளமாகக் கொண்டு இயங்கும் போதைக்கடத்தல் கும்பலை நடத்திய மிச்சல் ங்கோக் டிரானுக்கு இன்னும் தீர்ப்பு வழங்கப்படவில்லை.
நான்காண்டுகள், 9 மாதங்களுக்கு சிறைத் தண்டனை அனுபவித்த பிறகே ஸைனலை பரோலில் விடுவிப்பது குறித்து ஆலோசிக்கப்படும். தண்டனை விதிக்கப்படுவதற்கு முன்பாகவே ஏற்கெனவே 640 நாட்கள் சிறையில் கழித்தது குறிப்பிடத்தக்கது.