மலேசியாவின் அடுத்த பிரதமராக அன்வார் இப்ராஹிமுக்கு தாங்கள் ஆதரவளிப்பதாக கூறப்படுவதை மறுத்துள்ள அம்னோ கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், இதுகுறித்து போலிசிடம் புகார் அளித்து உள்ளனர்.
திரு அன்வார் அடுத்த பிரதமராக தங்களது ஆதரவை வெளிப்படுத்தவில்லை என்று தாங்கள் முன்னதாக கூறியிருந்தபோதும் அவருக்கு ஆதரவளிப்பதாகக் கூறும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலில் தங்களது பெயர்கள் இடம்பெற்றுள்ளதை அடுத்து போலிசிடம் புகார் அளித்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மலேசிய மாமன்னரை திரு அன்வார் சந்திக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ள ஒரு சில நாட்களில் எம்.பி.க்கள் இந்த விவகாரம் குறித்து போலிசிடம் புகார் அளித்துள்ளனர்.
அவர்களில் அராவ் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஷஹிடான் காசிமும் ஒருவர். அவருக்கு நடத்தப்பட்ட கொவிட்-19 பரிசோதனை முடிவு வெளிவரும் வரை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ள அவர், தமது உதவியாளர் மூலம் போலிசிடம் புகார் அளித்தார்.
“அன்வாருக்கு ஆதரவளிப்பதாகக் கூறப்படும் எம்.பி.க்கள் பட்டியலில் எனது பெயர் இடம்பெற்று இருப்பது எனக்கு ஆச்சரியம் தந்துள்ளது. இதுகுறித்து எனது விருப்பத்தைக் கேட்டறிய எவரும் என்னை அணுகவில்லை,” என்று திரு ஷஹிடான் கூறினார்.
புதிய ஆட்சி அமைக்க தமக்கு பெரும்பான்மை இருப்பதைக் கூற திரு அன்வார் ஊடகங்களை நாடியிருப்பது பொறுப்பற்ற செயல் என்று திரு ஷஹிடான் வர்ணித்தார்.
“அன்வாரிடம் உண்மையிலேயே பெரும்பான்மை இருந்தால், அதை அவர் நாடாளுமன்றத்திலோ அல்லது மாமன்னர் முன்னிலையிலோ நிரூபிக்க வேண்டும்.
“மாறாக, ஊடகங்களில் இதுகுறித்து அறிவித்து நாட்டில் ஏன் அவர் அரசியல் நிலையற்றதன்மையை ஏற்படுத்துகிறார்?” என்று திரு ஷஹிடான் வினவினார்.
இந்த விவகாரம் குறித்து போலிசிடம் புகார் அளித்துள்ள மற்றொரு எம்.பி. திரு அகமது நஸ்லான் இத்ரிஸ். திரு அன்வார் அடுத்த பிரதமராக தமது ஆதரவை வெளிப்படுத்தவே இல்லை என்றார் அவர்.
திரு அன்வாருக்கு ஆதரவளிப்பதாகக் கூறப்படும் எம்.பி.க்கள் பட்டியலில் 121 பேர் இடம்பெற்று உள்ளனர். அவர்களில் 22 பேர் அம்னோவைச் சேர்ந்தவர்கள். புதிய ஆட்சி அமைக்க திரு அன்வாருக்கு தாங்கள் ஆதரவளிப்பதாகக் கூறப்படுவதை அம்னோவின் 15 எம்.பி.க்கள் மறுத்துள்ளனர்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாமன்னரை திரு அன்வார் சந்திக்கும்போது அரசியல் நிலவரம் பற்றி முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.