மலேசியாவின் சாபா மாநிலத்தின் புதிய முதல்வர் ஹாஜிஜி நூருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. சாபா தலைநகர் கோத்தா கினபாலுவில் உள்ள குவீன் எலிசபெத் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருவதாக மலேசிய ஊடகம் தெரிவித்தது.
சாபாவில் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தில் மலேசியாவின் பல மூத்த அரசியல்வாதிகள் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தனர். திரு ஹாஜிஜிக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதால் அவர்களும் பாதிக்கப்படக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
65 வயது திரு ஹாஜிஜியின் உடல்நிலை சீராக இருப்பதாக அவரது மக்கள் தொடர்புச் செயலாளர் திரு எஃபெண்டி முகம்மது சுனோ தெரிவித்தார்.
திரு ஹாஜிஜியும் அவரது மனைவியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சாபாவில் பரவலாகப் பேசப்பட்டதும் அவருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டிருக்கும் செய்தி அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
சாபா சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொண்ட மலேசியப் பிரதமர் முகைதீன் யாசினும் அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்களும் தங்களைத் தனிமைப்படுத்தியுள்ளனர்.
முன்னாள் மலேசியப் பிரதமரும் 1எம்டிபி மோசடி வழக்கை எதிர்நோக்குபவருமான நஜிப் ரசாக்கும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
சாபாவிலிருந்து மலேசிய தீபகற்பத்துக்கும் சரவாக் மாநிலத்துக்கும் தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொண்ட அரசியல்வாதிகள் கொண்டு வந்துவிட்டதாக மலேசியர்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரமாக கெடா திரங்கானுவிலும் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்போர் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.