கோத்தா திங்கி: மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள கடலில் இருந்த ஆறு சீன மீன்பிடிக் கப்பல்களை மலேசிய கடல்துறை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இரண்டு வெவ்வேறு இடங்களில் அந்தக் கப்பல்களை நேற்று முன்தினம் காலை கண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மலேசிய கடற்பகுதிக்குள் இந்தச் சீன மீன்பிடிக் கப்பல்கள் அத்துமீறி நுழைந்ததாக ஜோகூர் துறைமுக ஆணையத்திடமிருந்து கடல்துறை அமலாக்கப் பிரிவுக்குத் தகவல் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டது.
கப்பல்களில் இருந்த 60 பேர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் அனைவரும் சீன நாட்டவர்கள் என்றும் அவர்கள் 31 வயதிலிருந்து 60 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.