சிங்கப்பூர் உடனான மலேசிய எல்லையை முழுமையாகத் திறப்பதற்கு மலேசிய அரசாங்கத்திடம் ஜோகூர் அதன் வாதத்தை முன்வைக்கும் என்று அம்மாநில முதல்வர் ஹஸ்னி முகம்மது தெரிவித்துள்ளார். இம்மாதம் 19ஆம் தேதி பொருளியல் செயல் மன்றத்திடம் ஜோகூர் அரசாங்கம் தனது திட்டத்தை சமர்ப்பிக்கும் என்று அவர் நேற்று முன்தினம் கூறினார்.
“எல்லையை மீண்டும் திறப்பதற்கான அவசியத்தை இந்தத் திட்டம் உள்ளடக்குவதோடு சிங்கப்பூரில் பணிபுரிவோரையும் ஜோகூரில் செய்யப்பட்டுள்ள முதலீடுகளின் தாக்கத்தையும் அது உள்ளடக்கும்,” என்று திரு ஹஸ்னி விவரித்தார்.
சிங்கப்பூர்-ஜோகூர் உடனான எல்லை மூடப்பட்டிருப்பதால் ஜோகூரில் செயல்படும் ஏராளமான வர்த்தகங்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார். எல்லை தொடர்ந்து மூடப்பட்டிருந்தால் தங்களால் தொடர்ந்து இயங்க முடியாது என்று வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பலரும் ஜோகூர் அரசாங்கத்திடம் கூறியுள்ளதாகவும் திரு ஹஸ்னி சொன்னார். வர்த்தகங்கள் ஒருபுறமிருக்க, வேலைக்காக சிங்கப்பூருக்கு தினமும் சென்று வந்த பல்லாயிரக்கணக்கான மலேசியர்களும் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாகவும் அவர் கூறினார்.