பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தமக்கு இருப்பதாகவும் தம்மை பிரதமராக நியமிக்க வேண்டும் என்றும் மலேசிய மாமன்னரை அண்மையில் சந்தித்துக் கேட்டுக்கொண்டார் கெஅடிலான் கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம்.
121 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தமக்கு இருப்பதாக அன்வார் கூறியதை அடுத்து, மலேசியாவில் உள்ள பல அரசியல் கட்சி கள் போலிசில் புகார் செய்தன.
இதுகுறித்து அன்வாரிடம் மலேசிய போலிஸ் நேற்று விசாரணை நடத்தியது.
போர்ட் டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினரான அன்வாரிடம் புக்கிட் அமானில் உள்ள போலிஸ் தலைமையகத்தில் விசாரணை நடத்தப்பட்டது.
கிட்டத்தட்ட இரண்டு மணி நேர விசாரணைக்குப் பிறகு போலிஸ் தலைமையகத்தைவிட்டு அன்வார் வெளியேறினார்.
தலைமையகத்துக்கு வெளியே காத்துக்கொண்டிருந்த செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.
“போலிசுக்கு நான் என் முழு ஒத்துழைப்பைத் தந்துள்ளேன். அரசியல் பலத்தைப் பயன்படுத்தி எனக்குத் தொல்லை கொடுக்கிறார்கள். எனக்குத் தொல்லை கொடுக்கச் சொல்லி அதிகாரத்தில் இருப்பவர்கள் போலிசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
“எனக்கு ஆதரவு வழங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை போலிசார் கேட்டனர். இது அவர்களுக்குத் தேவையற்றது. எனக்கும் மாமன்னருக்கும் இடையே நடைபெற்ற உரையாடல் பற்றி கேள்வி எழுப்புவது நியாயமற்றது,” என்றார் அன்வார்.