மலேசிய எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் சம்பந்தப்பட்ட ஆறு வழக்குகளை மலேசிய போலிஸ் விசாரித்து வருகிறது.
மலேசியாவின் அடுத்த பிரதமராக திரு அன்வாருக்கு ஆதரவு அளிக்கவிருக்கும் 121 எம்.பி.க்கள் என ஒரு பட்டியல் சமூக ஊடகங்களில் வலம் வந்த விவகாரம் அவ்வழக்குகளில் ஒன்று.
அதன் காரணமாகப் பொது ஒழுங்கிற்கு ஊறு விளைவித்தது தொடர்பிலும் திரு அன்வார் விசாரிக்கப்பட்டு வருகிறார்.
பிகேஆர் கட்சித் தலைவரான திரு அன்வாரிடமிருந்து நேற்று போலிஸ் வாக்குமூலம் பெற்றது என்று குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் ஹுஸிர் முகம்மது இன்று தெரிவித்தார்.
பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியில் இருந்து எம்.பி.க்கள் பலர் வெளியேறியதை அடுத்து, இப்போதைய பிரதமர் முகைதீன் யாசின் தலைமையில் கடந்த மார்ச் மாதம் ‘பெரிக்கத்தான் நேஷனல்’ என்ற புதிய கூட்டணி உருவாகி, ஆட்சியைப் பிடித்தது.
இந்நிலையில், திரு அன்வார் ஆதரவுப் பட்டியலில் தங்களது பெயரும் இடம்பெற்று இருந்ததை அடுத்து எம்.பி.க்கள் பலர் போலிசிடம் புகார் அளித்தனர்.
“இந்த விவகாரம் தொடர்பில் இதுவரை 113 புகார்கள் வந்துள்ளன,” என்று போலிஸ் கூறியது.
வெளிப்படையாகவும் நியாயமாகவும் விசாரணை நடத்துவதற்கு ஏதுவாக தங்களுக்குப் போதிய கால அவகாசம் அளிக்கப்பட வேண்டும் என்று போலிஸ் கேட்டுக்கொண்டு இருக்கிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை மாமன்னருடனான சந்திப்பிற்குப் பின், தமக்குப் பெரும்பான்மை உள்ளது என்பதற்கான சான்றை அவரிடம் அளித்துள்ளதாக திரு அன்வார் செய்தியாளர்களிடம் கூறினார். அதன் தொடர்பிலும் அவர் விசாரிக்கப்பட்டு வருகிறார்.
ஓரினப் புணர்ச்சியில் ஈடுபட்டதாகக் கூறி திரு அன்வார் ஏற்கெனவே இருமுறை தண்டிக்கப்பட்ட நிலையில், மீண்டும் அத்தகைய புகாரின் தொடர்பில் அவர் விசாரிக்கப்பட்டு வருகிறார்.
இதற்கு அரசியல் நெருக்கடிகளே காரணம் என திரு அன்வார் குற்றம் சாட்டியிருந்தார்.
ஆனால், அதை மறுத்துள்ள திரு ஹுஸிர், “எவ்வித அரசியல் அழுத்தமும் அரசியல் கட்சிகளின் குறுக்கீடுகளும் இன்றி விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்து இருக்கிறார்.