சிலாங்கூர் நதிநீர் மாசடைந்திருப்பதால் அம்மாநிலத்தில் சில தண்ணீர் சுத்திகரிப்பு ஆலைகள் மூடப்பட்டுள்ளன.
இதன் விளைவாக சிலாங்கூரில் உள்ள சில பகுதிகளில் தண்ணீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால் கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் பேர் தண்ணீர் இன்றி சிரமப்படுவதாக மலேசிய ஊடகம் தெரிவித்துள்ளது.
தலைநகர் கோலாலம்பூர், பெட்டாலிங், கிள்ளான், ஷா அலாம், கோலா சிலாங்கூர், ஹுலு சிலாங்கூர், கொம்பாக், கோலா லங்காட் ஆகிய இடங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் மாசடைந்திருப்பதை சிலாங்கூர் அதிகாரிகள் நேற்று அதிகாலை 2 மணி அளவில் கண்டுபிடித்தனர்.
கடந்த செப்டம்பர் மாதம் கொங் நதிநீர் மாசடைந்ததை அடுத்து, சிலாங்கூரில் தண்ணீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, கடந்த சனிக்கிழமையன்று தண்ணீர் குழாய் வெடித்ததால் சிலாங்கூர் மாநிலத்தில் தண்ணீர் விநியோகம் தடைப்பட்டது.
பெரும்பாலான பழுதுபார்ப்புப் பணிகள் முடிந்துவிட்டதாக சிலாங்கூர் தண்ணீர் விநியோக ஆணையம் தெரிவித்தது. இருப்பினும், துர்நாற்றம் இன்னும் நீங்காத காரணத்தால் ஆலைகளில் வேலையைத் தொடர முடியவில்லை என்று அது குறிப்பிட்டது. பாதிக்கப்பட்ட இடங்களில் வசிப்பவர்களுக்குத் தண்ணீர் லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மருத்துவமனைகள், ரத்த சுத்திகரிப்பு நிலையங்கள் போன்ற முக்கிய சேவை இடங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று அவர்கள் கூறினர்.