2014ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய மாடலிங் போட்டியில் முதல் பரிசு பெற்றவர் குமாரி சியூ, 23.
ஆனாலும், தம் திருமணத்தில் அழகான தோற்றத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக உடல் எடையைக் குறைக்க எண்ணிய மலேசியரான அவர், கோலாலம்பூரின் சேராசில் உள்ள அழகு நிலையம் ஒன்றில் ‘லிபோசக்சன்’ எனப்படும் கொழுப்பு குறைப்பு சிகிச்சை மேற்கொண்டார்.
ஆனால், கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 17) சிகிச்சையின்போது அவர் உயிரிழந்துவிட்டார்.
கைகளில் உள்ள கொழுப்பை நீக்குவதற்காக, இணையத்தில் தேடி அந்த அழகு நிலையத்தைக் கண்டுபிடித்த குமாரி சியூ, 2,500 ரிங்கிட் (S$820) விலையிலான அந்தச் சேவைக்குப் பதிவு செய்தார்.
சிகிச்சைக்குச் செல்லும்போது தனது நண்பரையும் உடன் அழைத்துச் சென்றார் அவர். சிகிச்சையின் தொடக்கமாக, அவருக்கு மயக்க ஊசி போடப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.
ஊசி போட்ட அரை மணி நேரத்துக்குள் அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்தில் அவரது இதயத் துடிப்பு நின்றுபோனதாகத் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக, அருகில் இருக்கும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, இதய செயல்பாட்டை மீட்க முயற்சிகள் எடுக்கப்பட்டன; ஆனால், அந்தப் பெண் இறந்துபோனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அத்தகைய சிகிச்சையை மேற்கொள்ள அந்த அழகு நிலையத்துக்கு உரிமம் வழங்கப்படவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த சிகிச்சையை மேற்கொண்ட பணியாளரும் நிபுணத்துவ உரிமம் பெற்றிருக்கவில்லை என்று குமாரி சியூ வின் சகோதரர் தெரிவித்தார்.
அந்த அழகு நிலையத்தின் உரிமையாளர்களான தாயும் மகளும் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டதாக தி ஸ்டார் செய்தி தெரிவித்தது.
அந்த அழகு நிலையத்தில் இத்தகைய சிகிச்சை குறைந்தபட்சம் 10 வாடிக்கையாளர்களுக்கு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.