மலேசியாவில் இதற்குமுன் இல்லாத வகையில் கொவிட்-19 தொற்றால் ஒரே நாளில் பத்துப் பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, அங்கு கிருமித் தொற்றால் மாண்டோர் எண்ணிக்கை 214ஆக அதிகரித்தது.
நேற்று முன்தினம் 800க்கு மேற்பட்டோரை கொரோனா தொற்றிய நிலையில், நேற்று அந்த எண்ணிக்கை 710ஆகப் பதிவானது.
ஆக அதிகமாக சாபா மாநிலத்தில் 528 பேர் கிருமித்தொற்றால் புதிதாகப் பாதிக்கப்பட்டனர். சிலாங்கூர் (62), பினாங்கு (39), நெகிரி செம்பிலான் (37), லபுவான் (19) ஆகிய மாநிலங்கள் அடுத்த இடங்களைப் பிடித்தன.
மலேசியாவில் இதுவரை 24,514 பேரை கொரோனா தொற்றிவிட்ட நிலையில் அவர்களில் 15,884 பேர் பாதிப்பிலிருந்து மீண்டுவிட்டனர். இப்போது 90 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.