மலேசிய நாடாளுமன்றத்தில் அடுத்த மாதம் 6ஆம் தேதி சமர்ப்பிக்கப்படவுள்ள, அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்துக்கு முழு ஆதரவு அளிக்கும்படி நாடாளுமன்ற உறுப்பினர்களை மலேசிய மாமன்னர் சுல்தான் அப்துல்லா அகமது ஷா கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த இக்கட்டான காலகட்டத்தில் வரவு செலவுத் திட்டம் தொடர்பாக பிரதமர் முஹைதீன் யாசினுடன் மாமன்னர் சந்திப்பு நிகழ்த்திய பிறகு அரண்மனை வெளியிட்ட அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டிருந்தது.
“அரசியல் சச்சரவுகளை ஒதுக்கிவைத்துவிட்டு, பொதுமக்களின் நலன், நாட்டின் முன்னேற்றம் ஆகியவற்றை உறுதி செய்யும்பொருட்டு, 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இடையூறின்றி நிறைவேற்றுவதன் தொடர்பில் மாமன்னரின் அறிவுறுத்தலுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மதிப்பளிக்க வேண்டும் என சுல்தான் அப்துல்லா கேட்டுக்கொண்டுள்ளார்,” என அரசாங்க நிதியதிகாரி அகமது ஃபாடில் ஷம்சுதின் குறிப்பிட்டார்.