கோலாலம்பூர்: மலேசியாவின் சரவாக் மாநிலத்தின் கூச்சிங் மாவட்டம் கொவிட்-19 சிவப்பு வட்டாரமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனையடுத்து அங்குள்ள 209 கல்வி நிலையங்களை இன்று (அக்.30) முதல் நவம்பர் 13ஆம் தேதி வரையில் மூடுவதற்கு சுகாதார அமைச்சு உத்தரவு பிறப்பித்துள்ளது. கல்வியமைச்சின் கீழ் இயங்கும் தொடக்கநிலை, உயர்நிலைப் பள்ளிகள், ஆசிரியர் பயிற்சிக் கழகம் மற்றும் கல்வியமைச்சில் பதிவுபெற்ற தனியார் பள்ளிகளும் மாணவர் தங்கும் விடுதியும் இதில் அடங்கும் என கல்வியமைச்சு ஓர் அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளது.
கூட்டாட்சி மண்டலத்தைச் சேர்ந்த லபுவான் பகுதியில் உள்ள பள்ளிகள் மூடப்பட்டிருப்பது நவம்பர் 13 வரை தொடரும்.
மாணவர்கள் தங்கள் பாடங்களையும் ஆசிரியர்கள் தங்களுக்குத் தேவையான கற்பித்தல் குறித்த விவரங்களையும் கல்வியமைச்சின் இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும் அமைச்சு தெரிவித்தது.
கல்வி நிலையங்கள் தங்கள் நிலையத்தின் கற்பித்தல், கற்றல் நடவடிக்கைகள் இணையம் வாயிலாக தொடர்ந்து நடைபெறுவதை உறுதிசெய்ய வேண்டும் என்று அமைச்சு தெரிவித்தது.
இந்நிலையில் ஜோகூரில் நீதிமன்றத்தில் மொழி பெயர்ப்பாளர்கள் இருவருக்கு கொவிட்-19 தொற்று இருந்தது உறுதிசெய்யப்பட்டதை அடுத்து அங்குள்ள நீதிமன்றங்களை மூடுவதற்கு ஜோகூர் சட்டக் கழகம் ஆணை பிறப்பித்து சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.