ஜோகூருடன் கூடிய சிங்கப்பூரின் எல்லை மீண்டும் திறக்கப்பட வேண்டுமென்றால் ஜோகூர் மக்கள் கொவிட்-19 கிருமியைத் துடைத்தொழிக்க முழுமூச்சாக ஒத்துழைத்து பாடுபட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு இருக்கிறது.
ஜோகூரில் கொவிட்-19 கிருமித்தொற்று கூடினால் சிங்கப்பூர் தன்னுடைய இரண்டு தரைவழி சோதனைச்சாவடிகளைத் திறந்துவிடாது என்று ஜோகூர் மாநிலத்தின் மலேசிய சீனர் சங்க அரசாங்க விவகார ஒருமுகப்பாட்டுக் குழுவின் தலைவர் மைக்கல் டே தெரிவித்தார்.
“ஜோகூர் சிவப்பு மண்டலமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இது நல்லதல்ல. ஜோகூர் ஊழியர்கள் சிங்கப்பூர் செல்வதற்குத் தோதாக எல்லைகளை சிங்கப்பூர் திறக்க வேண்டும் என்று ஜோகூர் விரும்புகிறது. இந்நிலையில், ஜோகூர் மாநிலத்தில் கிருமி அதிகமாகப் பரவுவது விரும்பத்தக்கதல்ல,” என்றாரவர்.
சிங்கப்பூர் மிகவும் திறமையாகச் செயல்பட்டு புதிய கிருமித்தொற்று எண்ணிக்கையை ஓரிலக்க அளவுக்குக் குறைத்து இருப்பதை அவர் சுட்டினார்.
பாதுகாப்பு இடைவெளியைக் கடைப்பிடிப்பது, வெளியே செல்லும்போது முகக்கவசங்களை அணிந்துகொள்வது போன்ற நடைமுறைகளை ஒவ்வொருவரும் பின்பற்றி நடப்பார்கள் என்று தான் நம்புவதாகவும் அவர் கூறினார்.
சிங்கப்பூருடனான எல்லை மார்ச் 18ல் மூடப்பட்டது முதலே ஜோகூர் பொருளியல் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு இருப்பதை திரு டே குறிப்பிட்டார்.
ஜோகூர் மாநிலத்தில் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு பிறப்பிக்கப்படுமானால் எல்லாருக்குமே நிலைமை மோசமாகிவிடும் என்று அவர் எச்சரித்தார்.
ஆகையால் ஒவ்வொருவரும் கொவிட்-19 கிருமிப் பரவலைத் தடுக்க வேண்டும் என்றார் அவர். இதேபோலவே ஜோகூர் பாரு சீன வர்த்தக தொழிற்சபைத் தலைவர் லோ குயெக் ஷின்னும் மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.