சிங்கப்பூரர்கள் இருவருடன் பறந்துகொண்டிருந்த இலகு ரக விமானம் மலேசியாவின் வடக்கு-தெற்கு விரைவுச் சாலையில் கேஎம் 47க்கு அருகில் இன்று (நவம்பர் 22) காலை அவசரமாகத் தரையிறங்கியது.
காலை 11.13 மணி அளவில் குலாய்க்கு செல்லும் அவசரத் தடத்தில் விமானம் தரையிறங்கியதாக ரெங்கம் தீ மற்றும் மீட்புத் துறை கமாண்டர் அசிரஃப் நூர் முகமது யூசொஃப் கூறினார்.
விமானத்தில் இயந்திரக் கோளாறு இருந்ததாகவும் அதன் விமானியும் துணை விமானியும் காயமின்றி தப்பியதாகவும் குறிப்பிட்டார் அவர்.
ஜோகூர் பாருவின் சினாய் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து அடுத்த கட்ட நடவடிக்கையை எதிர்நோக்கி விமானிகள் இருவரும் காத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சினாய் அனைத்துலக விமான நிலையத்துக்குத் திரும்பி தரையிறங்க அந்த விமானத்திலிருந்து காலை 10.40 மணிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டதாக மலேசிய விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.
பிரிமியர் ஏர் சிங்கப்பூர் தனியார் விமான நிறுவனத்தின் இந்த விமானம் சினாயிலிருந்து மலாக்காவுக்குச் சென்று கொண்டிருந்ததாகக் கூறப்பட்டது.
மலேசியாவின் போக்குவரத்து அமைச்சின் கீழ் இயங்கும் விமான விபத்து விசாரணைப் பிரிவு விசாரணையை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டது.