ஃபேன்டம் ரோல்ஸ் ராய்ஸ்
மஸ்டாங்
ரேஞ்ச் ரோவர்
ஆடி
- இவையெல்லாம் மாதாந்திரம் 1,360 ரிங்கிட் (S$446) முதல் 4,052 ரிங்கிட் வரை சம்பளம் வாங்கக்கூடிய கேபி19 கிரேட் மலேசிய குடிநுழைவு அதிகாரி வைத்துள்ள ஆடம்பர கார்கள்.
சட்டவிரோதமாக “சிறப்பு சேவைகள்” வழங்கிய மலேசிய குடிநுழைவு அதிகாரிகளின் ஊழலை வெளிப்படுத்திய அதிகாரிகள், இந்த நான்கு கார்கள் மட்டுமின்றி 800,000 ரிங்கிட் ரொக்கம், வேறு 22 ஆடம்பர கார்கள், உயர்திறன் கொண்ட 4 மோட்டார்சைக்கிள்கள், வீடுகள், நிலங்கள், நகைகள், விலை உயர்ந்த கைப்பைகள் என மேலும் அதிகமான பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.
“ஆப்ஸ் சிலாட்’ எனப் பெயரிடப்பட்ட நாடுதழுவிய அமலாக்க நடவடிக்கைகளில் குடிநுழைவுக் குற்றங்களுக்குத் துணைபோன 50 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களில் 28 பேர் குடிநுழைவுத்துறை அதிகாரிகள், 17 பேர் வெளிநாட்டு ஊழியர் முகவர்கள், ஐவர் மற்ற பிரிவினர்.
கடந்த வெள்ளிக்கிழமை ஒரு குடிநுழைவுத்துறை அதிகாரி, 3 வெளிநாட்டு ஊழியர் முகவர்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டு, 6 நாட்கள் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டனர்.
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் பணிபுரியும் துணை இயக்குநர் உட்பட 3 குடிநுழைவுத் துறை அதிகாரிகள் மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணைய அதிகாரிகளால் நேற்று தடுத்து வைக்கப்பட்டனர்.
அதனையடுத்து, தற்போது 53 பேர் கைதாகியுள்ள நிலையில் அவர்களில் 33 பேர் கோலாலம்பூரில் உள்ள 2 அனைத்துலக விமான நிலையங்கள், ஜோகூர் பாரு சிஐகியூ வளாகம் ஆகியவற்றில் பணிபுரியும் அதிகாரிகள்.
வெளிநாட்டு ஊழியர்கள், சட்டவிரோத குடியேறிகள் போன்றோருக்கு “ஸ்டாம்பு” வழங்கும் இந்த கும்பல் அனைத்துலக அளவில், குறிப்பாக சீனா, வியட்னாம், இந்தோனீசியா, பங்ளாதேஷ் போன்ற நாடுகளில் ஆட்கடத்தலில் ஈடுபடுவதாக நம்பப்படுகிறது.
வெளிநாட்டவர் மலேசியாவுக்குள் நுழைய, வெளியேற கோலாலம்பூரில் உள்ள 2 அனைத்துலக விமான நிலையங்களில் (KLIA and KLIA2) பணிபுரியும் குடிநுழைவு அதிகாரிகளுடன் வெளிநாட்டு முகவர்கள் இணைந்து செயல்படுவது தொடர்பான விசாரணைகளின்போது இது கண்டுபிடிக்கப்பட்டது.
மலேசியாவுக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டவர்கள் அங்கு நுழைய உதவும் வெளிநாட்டு முகவர்கள் மலேசிய முகவர்களுக்கு பயணிகளின் தகவல்களை அனுப்புவர். மலேசிய முகவர்கள் பின்னர் KLIA, KLIA2 ஆகியவற்றில் பணிபுரியும் மலேசிய குடிநுழைவு அதிகாரிகளுடன் பேசி, சிறப்பு கவுன்டர்களை அமைத்து அந்த வெளிநாட்டவர் உள்நுழைய அனுமதி வழங்குவர்,” என்று 'பேட்ரியாட்' எனும் அமைப்பின் தலைவர் முகமது அர்ஷட் ராஜி கூறினார்.
தடை செய்யப்பட்டவர்கள் அல்லது சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் அல்லது போலி கடவுச் சீட்டு வைத்திருப்பவர்கள் மலேசியாவிலிருந்து வெளியேற விரும்பினால் இதே போன்றதொரு நடைமுறையை அவர்கள் பின்பற்றுவதாகவும் அவர் தி ஸ்டார் பத்திரிகையிடம் தெரிவித்தார்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடப்புக்கு வந்த பிறகு இந்த சட்டவிரோத “ஃபிளையிங் பாஸ்போர்ட்” எனும் “சிறப்பு சேவைகளுக்கு” தேவை அதிகமானதாகக் கூறப்பட்டது.
வெளிநாட்டு ஊழியர்கள், சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் ஆகியோரது கடவுச்சீட்டுகளை முகவர்கள் சேகரித்து, குடிநுழைவு அதிகாரிகளிடம் கொடுப்பர்; அவற்றில் வெளியேறு, உள்நுழைவு ஸ்டாம்புகளை அதிகாரிகள் பதிவிட்டு வழங்கினர் என்று தெரிவிக்கப்பட்டது. இத்தகைய சேவைகளுக்கு 500 முதல் 6,000 ரிங்கிட் கட்டணத்தை அந்த கும்பல் வசூலித்தது.
கடந்த 2017ஆம் ஆண்டு முதல் இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வரும் இந்த கும்பல் சுமார் 14.5 மில்லியன் ரிங்கிட் வரை சுருட்டியதாக நம்பப்படுகிறது.
இந்த கும்பல் இத்தகைய சட்டவிரோத “சிறப்பு சேவைகளை” குறைந்தபட்சம் 30,000 வெளிநாட்டு ஊழியர்கள், சட்டவிரோத குடியேறிகளுக்கு வழங்கியதாக மலேசிய புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.
கைதுகளை உறுதிப்படுத்திய மலேசிய ஊழல் ஒழிப்புப் பிரிவு விசாரணை இயக்குநர் நோரஸ்லான் முகமது ரஸாலி, அவர்கள் மலேசிய ஊழல் ஒழிப்புச் சட்டம் உட்பட பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் விசாரணை நடத்தப்படுவதாகக் குறிப்பிட்டார்.