மலேசியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாக ஒரே நாளில் 2,188 கொரோனா தொற்றுச் சம்பவங்கள் இன்று (நவம்பர் 24) பதிவானது. நேற்று 1,882 பேருக்கு தொற்று பதிவானதே ஆக அதிக எண்ணிக்கையாகக் கருதப்பட்ட நிலையில் புதிய உச்சமாக 2,000க்கும் அதிகமான தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
மேலும் நால்வர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில், மலேசியாவில் கொவிட்-19ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 341ஆக உயர்ந்துள்ளது.
மலேசியாவில் கொவிட்-19 பாதிப்பு கண்டோரின் மொத்த எண்ணிக்கை 58,847 ஆனது. தற்போது 14,353 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 11 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 49 பேருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.
பெரும்பாலான புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் டெராடாய் குழுமத்தில் பதிவாகின. சிலாங்கூரில் இருக்கும் ‘டாப் குளோவ்’ கையுறை தயாரிக்கும் தொழிற்சாலைகளின் பணியாளர்கள் டெராடாய் குழுமத்தைச் சேர்ந்தவர்கள்.
அந்தப் பகுதியில் நிலைமையைக் கட்டுப்படுத்தவும் பெரிய அளவில் கொவிட்-19 பரிசோதனைகள் மேற்கொள்ளவும் பல மருத்துவ மற்றும் பொதுச் சுகாதார உதவிக் குழுக்கள் அந்தப் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
சாபாவில் கிருமித்தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில், பாஹாங், திரங்கானு, புத்ரஜெயா, பெர்லிஸ் ஆகிய மாநிலங்களில் புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் இல்லை.
இன்று பதிவான அனைத்து கிருமித்தொற்று சம்பவங்களும் உள்ளூரில் பரவியவை.