அடிலெய்டில் உள்ள ஒரு மருத்துவமனையில் 80 வயது மூதாட்டி ஒருவர் தொடர்ந்து இருமியதை அடுத்து, அது கொவிட்-19 நோய்த்தொற்றுக்கான அறிகுறியாக இருக்கலாம் எனச் சந்தேகித்து, அவரை உடனடியாக மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தினார் டாக்டர் தர்மினி.
அந்த மூதாட்டிக்கு கொவிட்-19 தொற்று உறுதியானதுடன், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 25 பேருக்கும் உடனடியாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
டாக்டர் தர்மினி இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் இருந்திருந்தால் சமூகத்தில் பலருக்கு கொவிட்-19 நோய் பரவியிருக்கும் என்றும் அது இப்போது தடுக்கப்பட்டுள்ளதாகவும் தெற்கு ஆஸ்திரேலிய பொதுச் சுகாதாரப் பிரிவின் தலைவர் நிக்கோலா ஸ்பூரியர் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் கொவிட்-19 நோய் பெருந்தொற்றாக பரவாமல் தடுத்ததற்காக மலேசியாவில் பிறந்தவரான மருத்துவர் தர்மினி துரைரத்தினத்துக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
டாக்டர் தர்மினியின் நற்செயலுக்காக ஆஸ்திரேலிய ஊடகங்களில் அவருக்குப் பாராட்டு தெரிவிக்கும் செய்திகள் வெளிவந்துள்ளன.
தமக்குக் கிடைத்துள்ள பாராட்டுகளை எண்ணி தாம் பெருமிதம் அடைவதாக டாக்டர் தர்மினி குறிப்பிட்டார்.
பினாங்கிலும் சிங்கப்பூரிலும் மருத்துவராக வேலை செய்து வந்த இவர், கடந்தாண்டு அடிலெய்ட் நகரில் குடியேறினார்.