மலேசிய பிரதமர் முகைதீன் யாசின் தாக்கல் செய்த வரவு செலவுத் திட்டத்துக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
அரசியல் நிச்சயமற்ற சூழ்நிலையில் பிரதமரின் நிர்வாகத்துக்கு கிடைத்த வெற்றியாக இது கருதப் படுகிறது.
வரவு செலவுத் திட்டம் 2021 வியப்பூட்டும் வகையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.
2வது வாசிப்பில் ஒரு பிரிவைக் குறித்து கேட்க குறைந்தது 15 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஆனால் எதிர்க்கட்சிகள் தேவையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைத் திரட்டுவதில் தவறிவிட்டன.
இதனால் அடுத்த கட்டமாக நிதி ஒதுக்கீடு தொடர்பான மூன்று வார விவாதம் நடைபெறும். இதற்கு முன்பு 3வது மற்றும் இறுதி வாசிப்பை நாடாளுமன்றம் அங்கீ கரிக்க வேண்டும்.
மொத்த வரவு செலவுத் திட்டத்தின் மதிப்பு 322.5 பில்லியன் ரிங்கிட்டாகும் (S$106 பில்லியன்).
பிரதமர் முகைதீனின் நிர்வாகத்தினர் வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்தபோது ஒற்றை இலக்க நாடாளுமன்ற உறுப்பினர் களின் ஆதரவு மட்டுமே அவர்களுக்கு இருந்தது.
ஆளும் தேசிய கூட்டணியில் அதிகமான உறுப்பினர்களுடன் இடம்பெற்றுள்ள தேசிய முன்னணியும் ஆட்சியைப் பற்றி தொடர்ந்து குறைகூறி வந்ததால் அதன் ஆதரவும் கேள்விக்குறியானது.
இந்த நிலையில் தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று வரவு செலவுத் திட்டத்துக்கு ஒட்டுமொத்த ஆதரவை அளித்தனர். ஆனால் வரவு செலவுத் திட்டத்தில் தங்களுடைய கோரிக்கைகளையும் சேர்க்க வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்பு அது நிபந்தனை விதித்திருந்தது.
இந்த நிலையில் நிதி அமைச்சர் ஸஃப்ருல் அப்துல் அஸிஸ், கூட்டணிக் கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை நிறை வேற்றும் வகையில் வரவு செலவுத் திட்டத்தில் சில மாற்றங்களைச் செய்திருந்தார்.
கடன் தவணையை குறிப்பிட்ட காலத்திற்கு ஒத்திவைத்தல், ‘இபிஎஃப்’ எனும் வருங்கால வைப்பு நிதியிலிருந்து நிதி எடுப்பதற்கான தகுதியைத் தளர்த்துதல், சாபா மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு அதிக அளவு உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் இவற்றுள் அடக்கம். முன்னதாக மாமன்னர் அப்துல்லா அஹமது ஷா, கிருமித்தொற்று பிரச்சினையை நாடு எதிர்நோக்கியுள்ள வேளையில் வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவு அளித்து அரசாங்கத்துக்கு உதவுமாறு உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டார்.