சிங்கப்பூர்-கோலாலம்பூர் அதிவிரைவு ரயில் சேவை தொடர்பான திட்ட அம்சங்கள் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று மலேசிய அரசாங்கம் நேற்று தெரிவித்தது.
ரயில் பாதை சிங்கப்பூருக்குப் பதிலாக ஜோகூர் பாருவில் நிறைவடைவது குறித்து மலேசியா பரிசீலனை செய்து வருவதாக செய்தி கள் வெளியானதை அடுத்து இந்த அறிவிப்பு செய்யப்பட்டது.
திட்டத்தை மேம்படுத்த பல புதிய பரிந்துரைகளை மலேசிய அரசாங்கம் முன்வைத்துள்ளதாக அந்நாட்டின் பொருளியல் விவகார அமைச்சர் முஸ்தஃபா முகம்மது கூறினார்.
இதுதொடர்பாக அடுத்த மாதம் 31ஆம் தேதி வரை கலந்துரையாட மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் கால அவகாசம் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
பேச்சுவார்த்தை முடிந்து முடிவு எடுக்கப்பட்டதும் அதுகுறித்துமலேசிய அரசாங்கம் அறிவிப்பு செய்யும் என்றார் அவர்.
ரயில் பாதையின் கடைசி நிலையமாக சிங்கப்பூருக்குப் பதிலாக ஜோகூர் பாரு அமைந்தால் 2010ஆம் ஆண்டில் முதன்முதலாக அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம் சிங்கப்பூரின் பங்கேற்பு இல்லாமல் தொடரும் என்று கூறப்படுகிறது.
மலேசியாவின் வேண்டுகோளுக்கு இணங்க இந்தத்திட்டம் இரண்டு முறை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
2018ஆம் ஆண்டில் ரயில் பாதை குறித்த திட்ட அம்சங்களை முடிவு செய்ய கடந்த மே மாதம் வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இது தற்போது அடுத்த மாதம் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவால் புதிய பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டிருப்பதை சிங்கப்பூரின் போக்குவரத்து அமைச்சு உறுதி செய்துள்ளது.
நட்புறவுடன் மலேசியாவுடன் கலந்துரையாடி வருவதாகவும் அதிவிரைவு ரயில் சேவை தொடர்பான இருதரப்பு ஒப்பந்தத்தின்கீழ் தனது பொறுப்புகளை நிறைவேற்ற முழு கடப்பாடு கொண்டிருப்பதாகவும் போக்குவரத்து அமைச்சு கூறியது.
அடுத்த மாதம் 31ஆம் தேதிக்குள் திட்டத்தை மலேசியா தொடங்காவிட்டால் சிங்கப்பூருக்கு ஏற்பட்ட செலவுகளை அது ஏற்க வேண்டும்.