மலேசியாவில் வெங்காய மூட்டைகளை லஞ்சமாகக் கேட்ட காவல்துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
சிரம்பானில் நடந்த இந்தச் சம்பவம் குறித்து பேசிய சிரம்பான் உதவி ஆணையர் முஹமட் சையது இப்ராஹிம், “புகார் வந்ததைத் தொடர்ந்து நவம்பர் 30ஆம் தேதி அன்று செனாவாங்கில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்,” என்றார்.
செனவாங் சாலைக்கட்டண சாவடியைக் கடந்த பிறகு தமது வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டதாக புகாரில் லாரி ஓட்டுநர் கூறியுள்ளார்.
“அப்போது ஒரு போலிஸ்காரர், ஆவணங்களைக் காட்டுமாறு கேட்டுள்ளார். ஆனால் ஆவணங்கள் இல்லாததால் இரண்டு வெங்காய மூட்டைகளை அவர் இறக்கி வைக்கச் சொல்லியிருக்கிறார்,” என்று உதவி ஆணையர் கூறினார்.
சந்தேக நபரிடம் பாரபட்சமின்றி விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் சொன்னார்.
இந்தச் சம்பவம் நவம்பர் 29ஆம் தேதி நடந்ததாக அறியப்படுகிறது. இதற்கு மறுநாள் ஷா ஆலம் போலிசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.