மலேசியாவிலும் இந்தோனீசியாவிலும் இதற்குமுன் இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் முறையே கொவிட்-19 தொற்று சம்பவங்கள் பதிவாகி உள்ளன. மலேசியாவில் 3,027 பேருக்கும் இந்தோனீசியாவில் 9,321 பேருக்கும் கிருமித்தொற்று நேற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இரண்டாவது நாளாக இவ்விரு நாடுகளிலும் அன்றாட தொற்று எண்ணிக்கை புதிய உச்சங்களை எட்டியுள்ளன.
மலேசியாவில் தொற்று அதிகரித்ததைத் தொடர்ந்து அங்கு பங்கு விலைகள் வீழ்ச்சியடைந்தன. அங்கு இதுவரை 128,465 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 521 பேர் உயிரிழந்துள்ளனர்.
மலேசியாவில் ஆர்-நாட் (R0) என அழைக்கப்படும் தொற்று விகிதம் 1.2 ஆக இருந்தால், அன்றாட கிருமித்தொற்று எண்ணிக்கை மார்ச் மாதத்தில் ஒரு நாளைக்கு 8,000ஐ எட்டக்கூடும் என்று சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா எச்சரித்துள்ளார்.
அன்றாட தொற்று எண்ணிக்கை ஜனவரி நான்காவது வாரத்தில் 3,000 ஆகவும் பிப்ரவரி நடுப்பகுதியில் 5,000 ஆகவும் அதிகரிக்கலாம் என அவர் கூறினார்.
கடந்த செப்டம்பரில் அங்கு கிருமித்தொற்று அதிகரிக்கத் தொடங்கியதிலிருந்து நாள்தோறும் நான்கு இலக்கங்களில் புதிய கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.
இதற்கிடையில், இந்தோனேசியாவில் நேற்று பதிவான 9,321 புதிய தொற்றுகளுடன் அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 797,723 ஆகியுள்ளது. இது தென்கிழக்கு ஆசியாவிலேயே அதிகமான பாதிப்பு எண்ணிக்கையாகும்.
அந்நாட்டில் நேற்று 224 பேர் கொரோனா கிருமியால் உயிரிழந்தனர். மொத்த இறப்பு எண்ணிக்கை 23,520 ஆகியுள்ளது.
கொவிட்-19 நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்க மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கைகள் சேர்க்கப்படுவதாக இந்தோனீசிய அதிகாரிகள் அண்மையில் தெரிவித்தனர். கொரோனாவுக்கான நாட்டின் 98 மருத்துவமனைகளில் நோயாளிகளைத் தனிமைப்படுத்த படுக்கைகள் குறைந்து வருகின்றன.
இரு நாடுகளும் கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.