பிறந்து 50 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை கடுமையாகத் தாக்கிய குரங்கை மலேசிய போலிசார் 45 மணி நேரத்துக்குள் சுட்டுக் கொன்றனர். வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துறையும் இந்த நடவடிக்கையில் இணைந்து செயல்பட்டது.
நீண்ட வாலுடைய மக்காக் இன குரங்கு அது என வடக்கு செபராங் பிராய் ஓசிபிடி துணை ஆணையர் நூர்ஸைனி முகமது நூர் குறிப்பிட்டார்.
நேற்று காலை 11.30 மணியளவில், குரங்கு குழந்தையைத் தாக்கிய பகுதிக்கு அருகிலேயே குரங்கை சுட்டுக் கொன்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுங்கை புயுவில் உள்ள கம்போங் மங்கிஸ் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் கூடத்தில் உறங்கிக்கொண்டிருந்த முகம்மது இஸிராஃபி டேனியல் அன்னூர் ரொஸ்மாண்டி எனும் அந்தக் குழந்தையை குரங்கு மிகவும் கொடூரமாகத் தாக்கியதாகக் கூறப்பட்டது.
குரங்கு கடித்ததால் குழந்தையின் வயிற்றில் காயம் ஏற்பட்ட இடத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பினாங்கு மருத்துவமனையில் சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
கடந்த சனிக்கிழமை பிற்பகல் 2.15 மணி வாக்கில் குழந்தையைத் தாக்கியது குரங்கு. குழந்தையின் தலை, வயிறு, கன்னம் ஆகிய பகுதிகளில் கடிபட்ட காயம் காணப்பட்டது.
உறங்கி எழுந்த குழந்தையை கூடத்தில் பாயில் படுக்க வைத்துவிட்டு, அதற்கு பால் தயாரித்துக்கொண்டிருந்தார் குழந்தையின் தாய்.
குழந்தையின் அழுகுரல் கேட்டு தாய் ஓடிவந்து பார்த்தபோது, படுக்கவைக்கப்பட்ட இடத்திலிருந்து 1 மீட்டர் தூரத்தில் ரத்த வெள்ளத்தில் குழந்தை கிடப்பதையும் அருகில் குரங்கு இருப்பதையும் கண்டார் அவர்.
பின்னர் குரங்கு அவ்விடத்திலிருந்து ஓடிவிட்டது. சம்பவம் நிகழ்ந்தபோது வீட்டின் அனைத்து வாயில்களும் சன்னல்களும் மூடப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டது.
தற்போது குழந்தையின் நிலை சீராக இருந்தாலும் அது பலத்த காயங்களுடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்த வட்டாரத்தில் அந்தக் குரங்கு அடிக்கடி தென்பட்டதாகவும் உணவு தேடி அலைந்ததாகவும் குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.