மலேசியாவின் குனுங் செரோவில் உள்ள ஸ்ரீ சுப்ரமணியர் கோயிலில் இவ்வாண்டு தைப்பூசக் கொண்டாட்டங்கள் எதுவும் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிபந்தனைகளுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அறிவிக்கப்பட்டிருப்பதால், அந்தக் கோயிலில் தைப்பூசம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் ரத்து செய்யப்படுவதாக ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபாவின் தலைவர் எம். விவேகாநந்தா தெரிவித்துள்ளார்.
தைப்பூசம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்துமாறு போலிசார் அறிவுறுத்தி இருப்பதாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
பால்குடம், காவடி, மொட்டை போடுதல், ரத ஊர்வலம், அன்னதானம், அங்கப்பிரதட்சணம் என எந்த நடவடிக்கையும் இருக்காது என்பதுடன் கோயிலுக்கு அருகில் எந்தக் கடையும் இருக்காது எனவும் அவர் குறிப்பிட்டார்.
பாதுகாப்பு நடைமுறைகளுக்கு உட்பட்டு சிறிய அளவில் தைப்பூச வழிபாடுகள் மட்டும் இடம்பெறும் என்றும் கடந்த வாரம் திரு விவேகாநந்தா தெரிவித்திருந்த வேளையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.