மலேசியாவில் 96 தனியார் மருத்துவமனைகள் கொவிட்-19க்கு சிகிச்சை அளிக்க ஒப்புக்கொண்டுள்ளன.
சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா இதனைத் தெரிவித்தார்.
“இந்த 96 மருத்துவமனைகள் 1,252 படுக்கைகள், 65 தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள், 54 சுவாச ஆதரவு கருவிகள் போன்றவற்றை அளிக்கும். அரசாங்கத் துறைகள், பொது பல்கலைக்கழகங்களில் உள்ள பரிசோதனைக் கூடங்களை பெருமளவிலான கொவிட்-19 பரிசோதனைக்காக அரசாங்கம் பயன்படுத்தும்,” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், நாடு முழுவதும் உள்ள பல அரசாங்கக் கட்டடங்கள் கொவிட்-19க்கான எச்சில், சளி மாதிரிகளை எடுக்கும் நிலையங்களாகப் பயன்படுத்தப்படும் என்றும் இன்று வெளியிட்ட அறிக்கையில் அவர் தெரிவித்தார்.
தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை எடுக்கும் கொவிட்-19 நோயாளிகளின் சிகிச்சைக் கட்டணம் பற்றி நிதி அமைச்சு, பேங்க் நெகரா மலேசியா, காப்பீட்டுத் துறை போன்றவற்றுடன் கலந்தாலோசிக்கப்படும் என்றார் அவர்.