மலேசியாவில் கொவிட்-19 தடுப்பூசிகளை வாங்கி விநியோகிக்க தனியாருக்கு அனுமதி அல்லது அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுவதற்கு அந்நாட்டு சுகாதார அமைச்சு மறுப்பு தெரிவித்துள்ளது.
மலேசிய நிறுவனம் ஒன்று தடுப்பூசிகளை மலேசியாவில் விநியோகிப்பதற்கான ஒப்பந்தம் கையொப்பமாகி இருப்பதாக மலேசியாவின் பெரித்தா ஹரியான் வெளியிட்ட அறிக்கையை அமைச்சு மறுத்தது.
பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்கான அனுமதியை சுகாதார அமைச்சிடமிருந்து பெற்றிருப்பதாக அந்தத் தனியார் நிறுவனம் தெரிவித்திருந்தது.
“கொவிட்-19 தடுப்பூசிகளை வாங்கவும் அதனை நிர்வகிப்பதற்கான அதிகாரமும் அமைச்சுக்கு மட்டுமே உள்ளது. நேஷனல் ஃபார்மசூட்டிகல் ரெகுலேட்டரி டிவிஷன்’ போன்ற முகவைகளின் மூலம் மருத்துவ விவகாரங்களை நிர்வகிப்பது அமைச்சின் கடமை,” என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.
மலேசியாவில் கொவிட்-19 தடுப்பூசிகளை விநியோகிக்க எஃகு உற்பத்தி நிறுவனமான மெஸ்டிரான் ஹோல்டிங்ஸ் நிறுவனம் (Mestron) சீனாவை அடித்தளமாகக் கொண்ட ஸோங்யு ஹெக்சிங் (செங்டு) இண்டஸ்ட்ரியல் கோ லிமிடெட் (Zhongyu) எனும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருப்பதாக மலேசியாவின் பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டிருந்தது.
தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய, விநியோகிக்க, விற்பனை செய்ய, சந்தைப்படுத்த, பயன்படுத்த பேச்சுவார்த்தைகளை அந்தச் சீன நிறுவனத்துடன் தொடங்க மலேசியாவின் சுகாதார அமைச்சிடமிருந்து தடைநீக்கக் கடிதம் பெற்றுவிட்டதாக மெஸ்டிரான் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் போர் டியோங் கெங் குறிப்பிட்டதாகவும் அந்தச் செய்தி குறிப்பிட்டது.