மலேசியாவில் கொவிட்-19 நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த அங்கு மீண்டும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடப்பில் இருந்தும் நோய் தொற்றியோர் எண்ணிக்கை தொடர்ந்து ஏறுமுகம் கண்டு வருகிறது.
அமலாக்க பணி, நோய்த்தொற்றுப் பரிசோதனை, தொடர்புகளைத் தடமறிதல் போன்ற நடவடிக்கைகளை அதிகாரிகள் குறைத்துவிட்டதாலே சமூக அளவில் நோய்த்தொற்று அதிகரித்து இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
கடந்த மாதம் 6 முதல் 22ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் பதிவான 350 புதிய கிருமித்தொற்றுக் குழுமங்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு வேலையிடங்களாக இருப்பதற்கான காரணம் என்ன என்பது பற்றியும் கேள்வி எழுந்துள்ளது.
மலேசியாவில் அன்றாடம் 3,000க்கும் அதிகமானோருக்கு நோய்த்தொற்று உறுதியானதால் நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மாதம் 13ஆம் தேதி நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மீண்டும் பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அண்மைய நாட்களாக அன்றாடம் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,000ஐ எட்டியது. நேற்று ஒரே நாளில் புதிய உச்சமாக 21 பேர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
குறிப்பிடும்படியாக, மலேசியாவில் மீண்டும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்ட அதே தருணத்தில், கொவிட்-19 நோயாளிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் அனைவரையும் பரிசோதிப்பதை அதிகாரிகள் நிறுத்திக்கொண்டனர். எடுத்துக்காட்டாக, நோயாளிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் எண்ணிக்கை 50க்கும் குறைவாக இருந்தால், 20 பேரின் பரிசோதனை மாதிரிகள் மட்டும் பெறப்படுகிறது.
மலேசியாவில் இவ்வாண்டு கொவிட்-19 தொற்று விகிதம் 8 விழுக்காட்டிற்கும் அதிகமாக உள்ளது. தொற்றைக் கட்டுப்படுத்த உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ள 5 விழுக்காடு அளவைவிட இது அதிகம். பிரதமர் முகைதீன் யாசினுக்கு 46 நிபுணர்கள் எழுதிய கடிதத்தில், நோய்த்தொற்றுப் பரிசோதனையை அதிகரிக்குமாறு கோரியிருந்தனர். அப்படி இருந்தும் பரிசோதனை அதிகரித்தபாடில்லை என்று அவர்கள் குறைகூறுகின்றனர்.
மலேசிய அரசாங்கத்திற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது என்பதாலேயே முடக்கநிலை அறிவிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரப் பராமரிப்புப் பகுப்பாய்வாளர் ஹைக்கல் ரோஸ்னான் கூறினார். தன்னிடம் இருப்பில் இருக்கும் வளங்களைக் கொண்டு மலேசியாவுக்கு தெளிவான, நீண்டகால திட்டம் தேவைப்படுவதாக அவர் சொன்னார்.