கம்போடியாவில் கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசி போடும் பணி இன்று (பிப்ரவரி 10) தொடங்கியுள்ளது.
கம்போடியாவுக்கு சீனா நன்கொடையாக வழங்கிய 600,000 தடுப்பூசி டோஸ்களைக் கொண்டு இந்தப் பணி தொடங்கியுள்ளது.
சுமார் 16 மில்லியன் மக்கள் வாழும் அந்த நாட்டில் 478 பேருக்கு மட்டுமே தொற்று ஏற்பட்டது. கடந்த நவம்பரில் அங்கு கிருமித்தொற்று குழுமம் கண்டறியப்பட்டபோதும் அங்கு கொவிட்-19ஆல் உயிரிழப்பு ஏதுமில்லை.
தாம் முதலில் தடுப்பூசி போட்டுக்கொள்ளப்போவதாக அறிவித்திருந்த அந்நாட்டுப் பிரதமர் ஹுன் சென், 68, சினோஃபார்ம் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் வயதைத் தாண்டி விட்டதால் அவர் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை. எனவே, அவரது மகன்கள், நீத்பதி, சுற்றுச்சூழல் அமைச்சர்கள் போன்றோர் இன்று தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
புனோம்பென்னில் உள்ள கல்மெட் மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொண்ட ராயல் கம்போடிய ராணுவப் படையின் துணை கமாண்டரும் பிரதமரின் மூத்த மகனுமாகிய ஹுன் மேனட்டை கடலுணவு சாப்பிட வேண்டாம் எனவும் மது அருந்த வேண்டாம் எனவும் மருத்துவர்கள் கேட்டுக்கொண்டனர்.
ஒரு மில்லியன் சினோஃபார்ம் தடுப்பூசி டோஸ்களை கம்போடியாவுக்கு நன்கொடையாக வழங்க இருப்பதாக சீனா குறிப்பிட்ட வேளையில், கடந்த ஞாயிறன்று 600,000 தடுப்பூசி டோஸ்கள் சிறப்பு விமானத்தில் கம்போடியாவைச் சென்றடைந்தன.
இந்த மருந்துகளைப் பெரும்பாலும் சுகாதாரப் பணியாளர்களுக்கும் ராணுவத்தினருக்கும் போடத் திட்டமிடப்பட்டுள்ளது.