அமைச்சர்களுக்குப் பத்து நாள் கட்டாய தனிமைப்படுத்தல் விதிமுறையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டதற்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதிகாரபூர்வ வெளிநாட்டுப் பயணங்களின்போது அமைச்சர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை (எஸ்ஓபி) மலேசிய அரசாங்கம் வெளியிட்டு உள்ளது.
இதுபற்றி பேசிய சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஸாம் அப்துல்லா, “தனியார் விமானங்களைப் பயன்படுத்தி, வெளிநாட்டுப் பயணத்தின்போது பொது வெளியில் செல்லாத அமைச்சர்கள் மட்டுமே, புதிய விதிகளின்படி மூன்று நாட்கள் கண்காணிப்புக்கு அனுமதிக்கப்படுவார்கள்,” என்றார்.
வர்த்தக விமானங்களைப் பயன்படுத்தும் அமைச்சர்கள், எல்லோரையும் போலவே பத்து நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் அவர் சொன்னார்.
சுகாதார அமைச்சு தனது அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் இந்நடைமுறைகளைப் பகிர்ந்துகொண்டுள்ளது.
அதிகாரபூர்வ வெளிநாட்டு பயணமாக இருக்க வேண்டும், குறுகிய கால பயணம், சிறிய பேராளர் குழு போன்ற நடைமுறைகளை அமைச்சர்கள் தங்களின் பயணங்களின் போது பின்பற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அதோடு அமைச்சர்கள் வர்த்தக ரீதியிலான விமானங்களைத் தவிர்த்து வெளிநாட்டுப் பயணங்களின் போது தனியார் விமானங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் வெளிநாட்டிற்குச் சென்ற பிறகு, அமைச்சர்கள் அதிகாரபூர்வ காரணங்களைத் தவிர வேறு எதற்காகவும் வெளியே செல்லக்கூடாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது.