மலேசியாவில் 11 புதிய கிருமித்தொற்று குழுமங்கள் இன்று அறிவிக்கப்பட்டன. அவற்றில் 9 வேலையிடங்கள் சம்பந்தப்பட்டவை.
மற்ற 2 புதிய குழுமங்களில் ஒன்று சமூகம் தொடர்பிலானது; மற்றொன்று சமயக் கூட்டம் ஒன்றின் தொடர்பிலானது என சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல் குறிப்பிட்டார்.
வேலையிடம் தொடர்பான 9 குழுமங்களில் ஐந்து ஜோகூரிலும், மூன்று சிலாங்கூரிலும் ஒன்று கெடாவிலும் பதிவானவை.
நாட்டில் கிருமித்தொற்று தொடங்கியது முதல் தற்போது வரை 983 கிருமித்தொற்று குழுமங்கள் அறியப்பட்டன. அவற்றில் 499 குழுமங்கள் தற்போது செயல்பாட்டில் இல்லை.
நடப்பில் இருக்கும் கிருமித்தொற்று குழுமங்களில் 64ல் புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.
இதற்கிடையே, இன்று மலேசியாவில் 2,464 கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகின. மொத்த கிருமித்தொற்று எண்ணிக்கை 264,269 ஆனது.
ஆயினும், சாதனை அளவாக இன்று 4,525 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
இன்று கிருமித்தொற்றால் மேலும் எழுவர் உயிரிழந்த நிலையில், மொத்த கொவிட்-19 தொடர்பான உயிரிழப்பு எண்ணிக்கை 965 ஆகியுள்ளது.