மலேசியாவில் கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நான்கு முக்கிய மாநிலங்களிலும் கூட்டரசு பிரதேசங்களிலும், ஏற்கெனவே நடப்பில் இருக்கும் பகுதி முடக்கநிலை மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாளை மறுநாளுடன் முடிவடையவிருந்த நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை, சிலாங்கூர், கோலாலம்பூர், ஜோகூர், பினாங்கு ஆகிய நான்கு முக்கிய பகுதிகளில் மார்ச் 4ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பாதுகாப்பு மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இன்று (பிப்ரவரி 16) அறிவித்தார்.
மிகச் சிறிய மாநிலமான பெர்லிசில் RMCO எனப்படும் மீட்பு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடப்பில் இருக்கும். நாட்டின் மற்ற பகுதிகளில் நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (CMCO) நடப்பில் இருக்கும்.
மேற்கண்ட வெவ்வேறு வகையான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பற்றிய குறிப்பான விதிமுறைகள் நாளை மறுநாள் வெளியிடப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு மலேசியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டதைவிட தளர்வான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை ஜனவரி 13 முதல் அங்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்தக் காலகட்டத்தில் பல்வேறு பிரிவு பொருளியல்கள் படிப்படியாகத் திறக்கப்பட்டுள்ளன.
கடந்த வாரத்தில் நாட்டின் சில பகுதிகளில் கிருமித்தொற்று குறைந்து வந்தாலும் சிலாங்கூர், கோலாலம்பூர், ஜோகூர், பினாங்கு ஆகிய பகுதிகளில் தொடர்ந்து அதிகமாகவே உள்ளது.
இந்தப் பகுதிகளில் 13 மில்லியன் மக்கள், அதாவது, மலேசிய மக்கள்தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கினர் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.