மின்னிலக்க பொருளியலை ஊக்குவிக்கும் நோக்கில் மலேசியா 56 பில்லியன் ரிங்கிட் (சுமார் S$18 பில்லியன்) மதிப்பிலான திட்டத்தை அறிவித்துள்ளது.
இந்தப் பத்தாண்டு திட்டத்தின் கீழ் மலேசிய அரசாங்கம் விரைவான, பரந்த இணைய இணைப்பிற்கான உள்கட்டமைப்பை மேம்படுத்தும் என்று அந்நாட்டு பிரதமர் முகைதீன் யாசின் தெரிவித்தார்.
இந்தத் திட்டத்தின் கிட்டத்தட்ட பாதியளவு தொகை தேசிய மின்னிலக்க இணைப்பு திட்டத்திற்குச் செலவிடப்படும். கண்ணாடியிழை கம்பிவட இணைய இணைப்பை ஒன்பது மில்லியன் இடங்களுக்கு விரிவுபடுத்தும் ஐந்தாண்டு திட்டமாகும் இது. முதற்கட்டமாக 2022ஆம் ஆண்டில் இந்த வசதி 7.5 மில்லியன் இடங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.
மலேசியாவின் 5ஜி மேம்பாட்டிற்கு இந்த உள்கட்டமைப்பு முக்கியமானதாக இருக்கும். தேசிய மின்னிலக்க இணைப்புத் திட்டத்திற்காக கடலுக்கடியில் கம்பிவடங்களை இணைப்பதற்காக 2023ஆம் ஆண்டிற்குள் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ஒரு பில்லியனுக்கும் கூடுதலான ரிங்கிட்டையும், 5ஜி இணைப்பை நாடு முழுவதும் விரிவுபடுத்துவதற்கு மேலும் 15 பில்லியன் ரிங்கிட்டையும் முதலீடு செய்யவுள்ளதாகவும் முகைதீன் கூறினார்.
நாடு முழுவதும் 5ஜி இணைப்பைக் கொண்டு வர மலேசியா 10 ஆண்டு இலக்கை நிர்ணயித்திருந்தாலும் இதன் பலனை இவ்வாண்டு இறுதி முதல் படிப்படியாக அனுபவிக்க முடியும் என்று கூறப்படுகிறது.
“5ஜி தொழில்நுட்பத்தின் நன்மைகளை இவ்வாண்டு இறுதி முதல் மக்கள் அனுபவிக்கத் தொடங்குவார்கள்.
“இதன் மூலம், இணையம், கிளவுட் சேவைகள் மூலம் தகவல்களை உடனடியாக பகிர்ந்துகொள்ளும் வகையில் 5ஜி கட்டமைப்பை ஏற்படுத்திய முதல் சில நாடுகளில் ஒன்றாக மலேசியாவும் இருக்கும்,” என்றார் முகைதீன்.
இதன் மூலம் 70 பில்லியன் டாலர் வரையிலான உள்நாட்டு, வெளிநாட்டு முதலீடுகள் ஈர்க்கப்படும் என்றும் உற்பத்தித்திறன் 30 விழுக்காடு அதிகரிக்கும் என்றும் அவர் சொன்னார்.