மலேசியாவில் கொவிட்-19 பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 300,000ஐக் கடந்தது.
இன்று புதிதாக 9 புதிய கிருமித்தொற்று குழுமங்கள் பதிவானதாகவும் அவை அனைத்தும் வேலையிடங்களுடன் தொடர்புடையவை என்றும் சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
அவற்றில் நான்கு குழுமங்கள் ஜோகூரிலும், 3 சிலாங்கூரிலும், ஒன்று கோலாலம்பூரிலும், எஞ்சிய ஒன்று பினாங்கிலும் பதிவாகின.
இன்று புதிதாக 2,437 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்த கிருமித்தொற்று எண்ணிக்கை 300,752 ஆனது. அவற்றில் 26,205 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று புதிதக 9 கொவிட்-19 மரணங்கள் பதிவாகின. அவர்களில் ஒருவர் வெளிநாட்டைச் சேர்ந்த 102 வயது மூதாட்டி. மற்ற 8 பேரும் 57 முதல் 88 வயதுக்குட்பட்ட மலேசியர்கள். அவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய் போன்ற பிரச்சினைகள் இருந்ததாகக் கூறப்பட்டது.
தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் 202 பேரில் 93 பேருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டது.