கொரோனா நெருக்கடிநிலை முடிவடைந்ததும் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்று மலேசியப் பிரதமர் முகைதீன் யாசின் உறுதி அளித்துள்ளார்.
அவர் பிரதமர் பதவி ஏற்று ஓராண்டாகியுள்ள நிலையில், சுகாதாரம் மற்றும் பொருளியல் நெருக்கடிகளைத் தமது அரசு வெற்றிகரமாக எதிர்கொண்டு வருவதாகக் கூறினார்.
மலேசியாவில் அவசரநிலையைப் பிரகடனம் செய்வது தொடர்பான அரசாங்கம் முன்வைத்த கோரிக்கையை கடந்த ஜனவரி மாதத்தில் மாமன்னர் ஏற்றுக்கொண்டார்.
நாடாளுமன்றம் கூடுவதை இது தடுக்கவில்லை என்றார் மாமன்னர் அப்துல்லா அகமது ஷா. பிரதமர் முகைதீனுக்குப் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இல்லை என்று அப்போது நம்பப்பட்டது.
நாடாளுமன்றம் கூடினால் அவரது ஆட்சி கலைக்கப்படக்கூடும் என்று பேசப்பட்டது.
ஆனால் அண்மையில் இரண்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கெஅடிலான் கட்சியிலிருந்து விலகி பிரதமர் முகைதீனுக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் திரு முகைதீனின் நிலை வலுவடைந்துள்ளது.
“மலேசிய வரலாற்றிலேயே அவசரநிலைக்கு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கொவிட்-19 நெருக்கடிநிலை முடிவடைந்ததும், நாடாளுமன்றத்தைக் கலைக்க நான் மாமன்னரிடம் கோரிக்கை விடுப்பேன். அதுவரை நானும் எனது அமைச்சர்களும் எங்கள் பணிகளைத் தொடருவோம்.” என்றார் திரு முகைதீன்.
மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் மலேசியாவின் கொவிட்-19 மரண விகிதம் குறைவாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
பெரும்பாலான நோயாளிகள் குணமடைந்துவிட்டதாகதிரு முகைதீன் குறிப்பிட்டார். கிருமித்தொற்றைத் தமது அரசாங்கம் மிகச் சரியாக எதிர்கொண்டு வருவதற்கு இது சான்று என்றார் அவர்.
மேலும் மலேசியாவில் வேலையின்மை விகிதம் கடந்த ஆண்டு மே மாதத்தில் 5.3 விழுக்காடாக இருந்ததாகவும் கடந்த ஆண்டிறுதியில் அது 4.8 விழுக்காடாகக் குறைந்ததாகவும் திரு முகைதீன் தெரிவித்தார்.